டெல்லி : இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவுக்கு பிறகு மனோஜ் பிரபாகர், இர்பான் பதான் போன்ற வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் குறிஞ்சி பூ போல் போல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைப்பார்கள். வெளிநாடுகளில் எல்லாம் ஆல் ரவுண்டர்கள் கொட்டிக் கிடந்த நிலையில், இந்தியாவில் மட்டும் நமக்கு என ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் கிடைக்க மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கிய காலம் இருக்கின்றது.
இந்த தருணத்தில் தான் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குள் வந்து புயலாக உருவெடுத்து பட்டையை கிளப்பினார். எனினும் ஹர்திக் பாண்டியா, ஒரு நாள், டி20 கிரிக்கெட் சிறப்பாக விளையாடினாலும் காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் சிவம் துபே டி20-ல் இந்தியாவுக்கு நல்ல ஆல்ரவுண்டராக இருந்தாலும், அவரும் சமீப காலமாக தடுமாறி வருகிறார். இந்த தருணத்தில் தான் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி நிதிஷ் குமார் ரெட்டி தற்போது இந்திய அணியின் புதிய ஆல் ரவுண்டராக உருவெடுத்திருக்கிறார்.
21 வயதான நிதிஷ்குமார் ரெட்டி கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 303 ரன்கள் குவித்தார். மேலும் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதன் மூலம் நிதிஷ்குமார் மீது அனைவரின் கவனமும் சென்றது. இந்த தருணத்தில் தான் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நிதிஷ்குமார் அறிமுகமாகி பேட்டிங்கில் 16 ரன்களும் பந்துவீச்சில் விக்கெட்டுகள் ஏதும் எடுக்காமல் 17 ரன்களும் நிதிஷ்குமார் விட்டுக்கொடுத்தார்.
இதனை அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் என இக்கட்டான நிலையில் இருந்த போது பேட்டிங்கில் நிதிஷ்குமார் அதிரடியை காட்டி இருக்கிறார். 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 74 ரன்களை விளாசினார். இதில் நான்கு பவுண்டரி, ஏழு சிக்ஸர்கள் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 217 என்ற நிலையில் இருந்தது.
பந்துவீச்சிலும் நிதிஷ்குமார் நான்கு ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் விளையாடிய இரண்டாவது சர்வதேச t20 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை நிதிஷ்குமார் வென்று இருக்கிறார். பெரும்பாலும் இந்தியாவுக்கு ஒரு நல்ல ஆல் ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, ஆட்டநாயகன் விருது குறித்து பேசிய அவர் இந்திய அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தை நான் மிகவும் பெருமை மிக்கதாக கருதுகின்றேன். நான் சிறப்பாக விளையாடுகின்றேன் என்றால் அதற்கு முழு பாராட்டுக்களும் என்னுடைய கேப்டனுக்கும் பயிற்சியாளர் கம்பிருக்கும் தான் சேர வேண்டும். அவர்கள் தான் நான் பயமின்றி விளையாடுவதற்கு அனுமதி அளித்தார்கள்.
முதலில் நான் கொஞ்சம் தடுமாறினேன் பிறகு மகமதுல்லாஹ் வீசிய நோபால் ஆட்டத்தில் திறப்புமுனையை ஏற்படுத்தியது. இந்திய அணிக்காக விளையாடுவதை சிறப்பான ஒரு விஷயமாக கருதுகின்றேன். தொடர்ந்து இதே போல் சிறப்பாக விளையாடி இந்திய அணி பெரும் பெற வேண்டும் என்பதை என்னுடைய ஆசையாக இருக்கிறது என்று நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.