டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடியுள்ள நிலையில், அவர் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி அபாரமாக செயல்பட்டுள்ளார். 21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 74 ரன்களையும், பவுலிங்கில் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக களமிறங்கிய 2வது டி20 போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்று நிதிஷ் குமார் ரெட்டி அசத்தியுள்ளார். நம்பர் 4 பேட்ஸ்மேனாகவும், 3வது வேகப்பந்துவீச்சாளராகவும் நிதிஷ் குமார் ரெட்டி பங்களித்திருப்பது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவுக்கான சரியான மாற்று வீரரை இந்திய அணியால் தயார் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. அதற்கு நிதிஷ் குமார் ரெட்டி தொடர்ச்சியாக இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்புகளை அளித்து அவருக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதனை இந்திய அணி நிர்வாகம் நிச்சயம் செய்யும் என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டி எளிதாக 135 கிமீ வேகத்தில் வீசுகிறார். ஹர்திக் பாண்டியா தனது தொடக்க காலத்தில் 130 கிமீ முதல் 135 கிமீ வேகத்தில் தான் பவுலிங் செய்தார். இதனால் இன்னும் சில ஆண்டுகளில் நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங் வேகம் நிச்சயம் அதிகரிக்கும்.
இதன் காரணமாக சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிரடி பேட்டிங் மற்றும் 2 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சில் பங்களிக்க முடியும் என்பதால் சிவம் துபே இந்திய அணியில் இடம்பிடித்து வந்தார். தற்போது அதே பணியை நிதிஷ் குமார் ரெட்டியால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இதனால் அடுத்தடுத்து நடக்கவுள்ள டி20 தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சிவம் துபே இருவரில் யாருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிவம் துபே எவ்வளவு முயற்சித்தாலும் அவரால் 132 கிமீ வேகத்திற்கு மேல் பவுலிங் செய்ய முடியவில்லை. இதனால் அவரை மித வேகப்பந்துவீச்சாளராகவே கணக்கில் கொள்ள முடியும்.
அவர் இடதுகை பேட்ஸ்மேன் என்பதும், ஸ்பின்னர்களை வெளுக்கக் கூடியவர் என்பதும் சாதகமாக உள்ளது. ஆனால் ரிங்கு சிங், ரியான் பராக், திலக் வர்மா உள்ளிட்டோரும் சிவம் துபேவின் பணியை செய்யக் கூடியவர்கள் என்பதால், யாருக்கு அடுத்தடுத்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.