குவாலியர்: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான சிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியர் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வீரர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க தயாராக இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சிவம் துபே காயம் காரணமாக விலகி இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சிவம் துபே முக்கியமான வீரராக இருந்து வந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு பின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஒருவர் தேவை இருப்பதால், சிவம் துபேவை இந்திய அணி நிர்வாகம் அதிகளவிலான வாய்ப்புகளை கொடுத்து தயார் செய்து வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிவம் துபே விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவம் துபேவுக்கு மாற்று வீரராக திலக் வர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை காலை இந்திய அணியுடன் குவாலியர் மைதானத்தில் இணைந்து கொள்வார் என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடனடியாக இந்திய பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.
இதனால் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபேவுக்கான மாற்று வீரராக தான் நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரும் இவர்கள் இருவரை போலவே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தான்.
துலீப் டிராபியின் போது நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங் ஆக்ஷனை பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் நிதிஷ் குமார் ரெட்டி நாளைய ஆட்டத்தில் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சோகத்தில் இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.
ஏனென்றால் நிதிஷ் குமார் ரெட்டி வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகவில்லை என்றால், ஐதராபாத் அணியால் அவரை அன்-கேப்ட் வீரராக ரூ.4 கோடி மட்டும் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிக்கு அறிமுகமாகினால், குறைந்தபட்சம் ரூ.11 கோடி கொடுத்து தான் ரிடெய்ன் செய்யும் நிலை உள்ளது. இதனால் ஐதராபாத் அணி நிர்வாகம் நாளைய ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகிறாரா இல்லையா என்பதை தீவிரமாக கண்காணிக்கும் என்று பார்க்கப்படுகிறது.