டெல்லி: இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டராக கொண்டு வரப்பட்டுள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலேயே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், காயம் காரணமாக பயணிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக நிதிஷ் குமார் ரெட்டியை தயார் செய்ய வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக இருந்தது.
இதன் காரணமாக துலீப் டிராபி தொடரில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங் ஆக்ஷன் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். முதல் டி20 போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், பவுலிங்கில் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை.

அதேபோல் பேட்டிங்கில் 15 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் 2வது டி20 போட்டியிலும் நம்பிக்கை வைத்து நிதிஷ் குமார் ரெட்டி களமிறக்கப்பட்டார். இந்திய அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, நம்பர் 4 பேட்ஸ்மேனாக நிதிஷ் குமார் ரெட்டி உள்ளே வந்தார்.
களத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. அதன்பின் நிதானமாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி, 11 பந்துகளில் 12 ரன்களுடன் களத்தில் இருந்தார். அப்போது மஹ்மதுல்லா வீசிய ஒரு பந்து நோ-பாலாக மாற, அப்போது கிடைத்த ஃபீரி ஹிட்டில் சிக்ஸ் அடித்து அதிரடியை தொடங்கினார்.
அதன்பின் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க, தொடர்ந்து 10வது ஓவரை வீசிய ரிஷாத் ஹொசைன் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 அபார சிக்சர்களை விளாசி மிரள வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை கட்டாயமாக விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி, 27 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 2வது போட்டியிலேயே அரைசதம் அடித்து நிதிஷ் குமார் ரெட்டி அசத்தியுள்ளார்.
பின்னர் மெஹதி ஹசன் வீசிய 13வது ஓவரில் மட்டும் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 26 ரன்களை விளாசி நிதிஷ் குமார் ரெட்டி ஆச்சரியப்படுத்தினார். சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அதிரடியில் இருந்து கியரை மாற்ற தயாராகவில்லை. அப்போது முஸ்தாஃபிசுர் ரஹ்மான் கூடுதல் வேகத்துடன் வீசிய பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.
இதனால் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 74 ரன்கள் எடுத்து நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் ஆட்டமிழந்து பெவிலியன் சென்ற போது, கம்பீர் உட்பட அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் இந்திய அணியின் அடுத்த ஹர்திக் பாண்டியா ரெடி என்றும், இவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.