ஆண்டிகுவா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனியால் கூட செய்ய முடியாத சாதனை ஒன்றை ஹர்திக் பாண்டியா செய்து காட்டி இருப்பது அவர்களுடைய விமர்சகர்களை வாய் அடைக்க வைத்திருக்கிறது. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றில் ஒரு காலை எடுத்து வைத்து விடலாம்.வங்கதேச அணி பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொள்ள முற்பட்ட இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். குறிப்பாக சூரிய குமார் ஆறு ரன்களில் வெளியேறியது அணிக்குப் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்திய அணி 11.4 ஓவரில் 108 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போதுதான் இந்திய அணியில் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களத்திற்குள் வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தபோது ரசிகர்கள் அவரை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கினார்கள்.
சொந்த அணி கேப்டனுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து அவரை கடுமையாக விமர்சித்தார்கள். இதனால் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கடுமையாக தடுமாறினார். இந்த சூழ்நிலையில் இன்று இந்திய அணி தடுமாறிய போது ஹர்திக் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கரை சேர்த்தார்.
27 பந்துகளை எதிர்கொண்ட ஹர்திக் அரைசதம் கடந்தார்.இதில் மூன்று சிக்சர்கள், நான்கு பவுண்டரிகள் அடங்கும். இதனால் இந்திய அணி 160 ரன்கள் தான் எடுக்கும் என்ற நிலையில் இருந்து 196 அன்று சவாலான ஸ்கோரை எட்டியது. இதன்மூலம் ஒரு மாபெரும் சாதனை செய்திருக்கிறார்.
அதாவது டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக நம்பர் 6வது இடத்தில் பேட்டிங் வரிசையில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். குறிப்பாக தோனி தான் டி20 போட்டிகளில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் களமிறங்கி விளையாடுவார். ஆனால் தோனியால் கூட இதுவரை ஒரு முறை கூட இந்த இடத்தில் களமிறங்கி அரை சதம் அடிக்க முடிந்ததில்லை. இந்த சூழலில் தோனியால் கூட செய்ய முடியாத ஒன்றை ஹர்திக் பாண்டியா செய்து காட்டியிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.