ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4 போட்டிகளில் விளையாடி 29 ரன்கள் மட்டுமே சேர்த்திருப்பதால், ரசிகர்கள் பலரும் அவரது ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த 10 டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் ஒரேயொரு முறை மட்டுமே 50 ரன்களை கடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர் விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஏனென்றால் நியூயார்க் பிட்சில் 4,1,0 என்று மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்களில் வெளியேறினார்.

முதல்முறையாக இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வரும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த போட்டியில் சில நல்ல ஷாட்களை விளையாடி இருந்தாலும், விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் இதுவரை நம்பிக்கையை கொடுக்கவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசுகையில், விராட் கோலியின் பேட்டிங்கில் எனக்கும் திருப்தியில்லை.
அவர் நல்ல ஸ்கோரை அடித்து ஃபார்முக்கு திரும்ப வேண்டும். ஆனால் சில நேரங்களில் முன்னணி வீரர்களுக்கு முன் சவால் இருப்பதும் நன்மை தான். இந்திய மண்ணில் அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பேட்ஸ்மேன்களே, தற்போது நன்றாக ரன்களை சேர்த்து வருகிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவாலை திறம்பட சமாளிக்கிறார்கள். இதனை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்திய அணியில் எப்போதும் திறமையான வீரர்களுக்கு பஞ்சமே கிடையாது. ஆன்டிகுவா மைதானம் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அணியில் 2 முதல் 3 ஸ்பின்னர்களை விளையாட வைக்க முடியும். அதுதான் இந்திய அணியின் பலமும் கூட. அதனால் மீண்டும் இந்திய அணி ஸ்பின்னர்களின் பலத்துடன் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
8வது பேட்ஸ்மேனாக அக்சர் படேல் வரும் போது கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. அவர் சிறப்பாக பவுலிங் செய்வதால், கூடுதல் ஆப்ஷனை ரோகித் சர்மாவுக்கு அளிக்க முடிகிறது. நாங்கள் ஏற்கனவே நியூயார்க் மைதானம் போன்ற மோசமான பிட்சில் விளையாடிவிட்டோம். அதனுடன் ஒப்பிடும் போது நிச்சயம் இந்த பிட்ச் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.