டெல்லி: இந்திய கிரிக்கெட் முடிசூடா மன்னன் யார் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிரடியான பதில் ஒன்றை அளித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், தோனி, சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோரை விடவும் 35 வயதாகும் வீரர் தான் இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் என்று கம்பீர் கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி அணிக்காக ஆடிய விராட் கோலியும், லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீரும் களத்திலேயே நேரடியாக மோதிக் கொண்டனர். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்ட போது, எப்படி விராட் கோலி மற்றும் கம்பீர் கூட்டணி இணைந்து பணியாற்றும் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் கவுதம் கம்பீரின் கோரிக்கைக்கு ஏற்ப இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்புக் கொண்டார். அதன்பின் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நாளை சென்னை வரவுள்ளது.
43 நாட்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கவுள்ளனர். அதேபோல் ஹோம் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாமில் ஈடுபட பிசிசிஐ ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் முதல் டெஸ்ட் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக டெல்லி பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரும் டெல்லி மாநில வீரர் என்பதோடு, ரஞ்சி டிராபியில் ஏராளமான முறை டெல்லி அணியை வழிநடத்தி இருக்கிறார்.
அப்போது கம்பீரிடம் தொகுப்பாளர் ஷெஃபாலி பாகா ஒரு கேள்வி எழுப்பினார்.. இந்திய கிரிக்கெட்டின் "ஷாகின்ஷா" என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோஹித் சர்மா என்று சில பெயர்களில் இருந்து தேர்வு செய்ய கம்பீர் பணிக்கப்பட்டார். ஆனால் கம்பீர் அந்த பெயர்களை தேர்வு செய்யாமல் உடனடியாக விராட் கோலி தான் என்று பதில் அளித்தார்.
விராட் கோலியின் பெயரினை கவுதம் கம்பீர் தேர்வு செய்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விராட் கோலியுடன் நேரடியாக மோதி கொண்டாலும், கம்பீர் ஒருமுறை கூட விராட் கோலியின் திறமையை பாராட்டாமல் இருந்ததில்லை. அதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
மேலும் விராட் கோலி சுமார் 9 மாதங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார். 2வது குழந்தை பிறப்பு காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடவில்லை. அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விராட் கோலி ஆடி வந்தார். தற்போது ஹோம் சீசனையொட்டி டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கோலி திரும்பியிருப்பது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. '