மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மட்டும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினால், அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து நன்றாக அறிந்தவன் என்ற முறையில், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது எளிதான விஷயமல்ல என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். குஜராத் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா, அடுத்து வரும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஹர்திக் பாண்டியா இதுவரை உறுதி செய்யவில்லை.

இதற்கு பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் ஹர்திக் பாண்டியாவை போல் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இருந்தால், இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்படும். இதனால் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவால் விளையாட முடிந்தால், அவரை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே வரவில்லை. அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற உடல்நிலையை பராமரிக்க முடியாததால், ஒயிட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். இந்திய அணி நிர்வாகமும் ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாட அனுமதித்தது.
உள்ளூர் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்காமல் இருந்து வந்ததால், இனி அவர் ரெட் பால் பக்கமே வர மாட்டார் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரெட் பாலில் மீண்டும் பயிற்சியை தொடங்கி இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் குழப்பமும் எழுந்துள்ளது. என்ன காரணத்திற்காக ஹர்திக் பாண்டியா ரெட் பால் பயிற்சியை தொடங்கியுள்ளார் என்பது புரியாமல் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், ஹர்திக் பாண்டியா மட்டும் ரெட் பால் கிரிக்கெட்டை மீண்டும் விளையாடினால், அது மிகச்சிறந்த விஷயமாக இருக்கும். ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் என்று இரு ரோல்களையும் ஒரே வீரர் செய்யும் போது, ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் கிடைக்கும்.
ஆனால் ஒரு உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் வந்தால், ஆச்சரியம் கொள்வேன். ஹர்திக் பாண்டியாவின் உடல் குறித்து நன்றாக அறிவேன். அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது எளிதாக விஷயமாக இருக்காது. ஒருவேளை அது மட்டும் நடந்தால், நிச்சயம் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்திய அணிக்கு கட்டாயம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவையென்றால், 3 பேர் சிறந்த வாய்ப்பாக இருக்கிறார்கள். அதில் முதலில் இருப்பது ஷர்துல் தாக்கூர் தான். வெளிநாடுகளில் ஷர்துல் தாக்கூர் மிகச்சிறந்த வீரராக இந்திய அணிக்கு இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி இருக்கிறார். அவர் இன்னும் போதுமான அனுபவம் பெறவில்லை என்றாலும், வாய்ப்பு அளிக்கலாம். கடைசி வாய்ப்பாக சிவம் துபே இருப்பதாக தெரிவித்துள்ளார்.