சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
தனது சொந்த மண்ணில் விளையாடிய அஸ்வின் சென்னை சேப்பாக்கம் தனது கோட்டைதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அஸ்வின் கடைசியாக சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போது சதம் அடித்து அசத்தினார்.

இதேபோன்று மீண்டும் இந்திய அணியின் பேட்டிங்கில் அஸ்வின் அடித்த சதம் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று அஸ்வின் பந்துவீச்சிலும் பிரமாதமாக செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக செயல்பட்ட அஸ்வின் ஆறு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 88 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
ஜடேஜா மூன்று விக்கெட், பும்ரா ஒரு விக்கெட்டும் எடுக்க வங்கதேச அணி கடைசி இன்னிங்சில் 234 ரன்களில் சுருண்டது. இந்த நிலையில் அஸ்வின் தற்போது ஒரு மாபெரும் சாதனையும் படைத்திருக்கிறார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது அஸ்வின் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
வங்கதேச வீரர் ஷகிபுல் ஹசன் விக்கெட்டை வீழ்த்திய பிறகு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்சின் சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்திருக்கிறார். 132 போட்டிகளில் விளையாடிய வால்ஸ் 519 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அஸ்வின் தற்போது 101 டெஸ்டுகளில் 522 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயனின் சாதனையை முறியடித்து விடுவார். நாதன் லயான் தற்போது 129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 530 விக்கெட்டுக்குடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று அஸ்வின் இன்னொரு சாதனையை செய்து இருக்கிறார்.
அதாவது ஒரே மைதானத்தில் ஒரு போட்டியில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை இரண்டு முறை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்திருக்கிறார். இப்படி ஒரு ரெக்கார்டை 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.