சென்னை : சிறுவயதில் அஸ்வினை பார்க்கும் போதே அவர் மிக சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என்பதை கணித்தேன் என்று அஸ்வின் பயிற்சியாளரான சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின் தற்போது கும்பளேக்கு பிறகு, அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்று பெருமையை பெற்றிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் கலக்கி வரும் அஸ்வின், அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸி ஜாம்பவான் வார்னேவின் ரெக்கார்டை சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில் அஸ்வின் குறித்து அவருடைய இளம் பயிற்சியாளர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியினை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி அடுத்த தலைமுறைக்கான சுழற் பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தது அப்போது நடந்த முகாமில் தான் நான் முதன்முறையாக அஸ்வினை பார்த்தேன். அஸ்வின் நல்ல உயரமாக இருந்தார். இதனால், அவர் பந்து வீசும் போது பவுன்ஸ் அதிகமாக இருந்தது மற்றும் பந்தும் நன்றாக திரும்பியது.
இந்த மூன்றும் அஸ்வினுக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்ததால் இதை வைத்தே அவர் உலகத்தை ஆள்வார் என்று நினைத்தேன். சுழற் பந்துவீச்சாளர்கள் உயரமாக இருப்பதன் மூலம் அவர்களால் ஆடுகளத்தில் இருந்து பந்தை நன்றாக பவுன்ஸ் செய்ய வைக்க முடியும். அது மட்டுமல்லாமல் அஸ்வினுக்கு மிக சிறந்த கிரிக்கெட் அறிவு இருக்கின்றது. மற்ற வீரர்கள் போல் இல்லாமல் அஸ்வின் புதிதாக யோசிக்க கூடியவராக இருந்தார்.
அவர் அறிவாளி மட்டுமல்லாமல் என்ன செய்தால் என்ன நடக்கும் என்பதை சரியாக புரிந்து கொண்டிருந்தார். அஸ்வின் கிரிக்கெட் வீரராக வருவதற்கு முன்பே அவருடைய புத்திசாலித்தனம் வெளியானது. நான் அப்போதே இவர் ஆல் டைம் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என்று கணித்தேன். அஸ்வினுக்கு பந்துவீச்சு மட்டுமல்ல பேட்டிங்கும் நன்றாக வரும். விவிஎஸ் லக்ஷ்மன் போல் பேட்டிங் செய்யும் திறன் அஸ்வினுக்கு இருக்கிறது.
நான் பலமுறை அஸ்வினிடம் உன்னுடைய பேட்டிங்கை விட்டு விடாதே என்று கூறினேன். ஆனால் பேட்டிங்கை விட சுழற் பந்துவீச்சு தான் அஸ்வினுக்கு மிகவும் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் தாம் பந்து வீசும் போது பில்டர்களை எங்கு நிறுத்த வேண்டும் என்ற நுணக்கம் அஸ்வினுக்கு நன்றாகவே தெரியும். நான் பயிற்சியாளராக இருக்கும்போது அஸ்வின் என்னை சந்தேகம் கேட்டு தொலைத்து விடுவார்.
நான் சில விஷயத்தை கூறினால் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார். கிரிக்கெட் தொடர்பான சிறிய நுணுக்கங்கள் கூட தெரிய வேண்டும் என்பதில் அஸ்வின் தெளிவாக இருந்தார். அஸ்வின் பல ஐடியாக்களை கூறுவார். ஒவ்வொரு விஷயத்திலும் தன்னுடைய கண்ணோட்டத்தை அஸ்வின் தெரிவிப்பார். வெளியிலிருந்து பார்க்கும் நபர் நாங்கள் பேசிக் கொள்வதை கேட்டால் ஏதோ இரண்டு பைத்தியக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள் போல என்று நினைத்துக் கொள்வார்கள்.
என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்பது அஸ்வினுக்கு நன்றாகவே தெரியும். அஸ்வின் மிகவும் சென்சிடிவ் ஆன நபர். அவருக்கு முட்டாள்தனமான ஐடியாக்கள் கொஞ்சம் கூட பிடிக்காது. நான் சில கருத்துக்களை கூறினால், அது அவருக்கு செட் ஆகவில்லை என்றால் வேண்டாம் என்று மறுத்து விடுவார். நான் எனக்கு தெரிந்த வழியில் செய்து விடுகிறேன் என்று கூறுவார் என சிறு வயது பயிற்சியாளர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.