டெல்லி: இந்திய அணி லெக் ஸ்பின்னர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள ரவி பிஷ்னாய் இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் தன்னை நிரூபித்த போதும், அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காதது சோகம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருந்தார். 3 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த அவர், முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் வருண் சக்கரவர்த்தியை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இதனிடையே ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரவி பிஷ்னாய் பெஞ்ச் செய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுதம் கம்பீர் காரணமாக வருண் சக்கரவர்த்தி முதலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் லெக் ஸ்பின்னர்கள் மோசமான நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், இந்திய அணிக்காக கிடைத்த வாய்ப்புகளில் ரவி பிஷ்னாய் சிறப்பாக செயல்பட்டுள்ள போதும், அவருக்கான மரியாதை அளிக்கப்படவில்லை என்று கருதுகிறேன். அர்ஷ்தீப் சிங் முதன்மை பவுலராக மாறியுள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ரவி பிஷ்னாய் ஒன்றும் சளைத்தவர் அல்ல.
இந்திய அணியில் இருந்து எந்த வீரரை நீக்குவது என்று குழம்பும் போது, முதல் வீரராக ரவி பிஷ்னாயை நீக்கிவிடுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்திய அணியில் எந்த லெக் ஸ்பின்னருக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை. இதுநாள் வரை சாஹல் ஒரு உலகக்கோப்பை போட்டியில் கூட விளையாட வைக்கப்படவில்லை. அவர் அணியில் இருந்த போதும், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.
அதேபோல், ரவி பிஷ்னாய் இந்திய அணியில் இருந்த போதும், கன்சிஸ்டசியுடன் வாய்ப்பு அளிக்கவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட ஒரு புதிய ஸ்பின்னரை களமிறக்க வாய்ப்பு இருந்த போதும், வருண் சக்கரவர்த்தி தான் களமிறக்கப்பட்டார். அதில் எந்த தவறும் இல்லை. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள வீரருக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
ஆனால் அப்படி செய்யும் போது ரவி பிஷ்னாய்-க்கு என்ன பதிலை அளிப்பீர்கள். இந்திய அணியில் 15 பேருக்கான தேர்வு நடக்கிறது. அதன்பின் பிளேயிங் லெவனில் ஒரு தேர்வு நடக்கிறது. 15 வீரர்களை தேர்வு செய்யும் போது, அனைத்து வீரர்களுக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு வீரரின் இழப்பு, மற்றொரு வீரருக்கான வாய்ப்பு தான். அதனை மறுக்கவில்லை. ஆனால் ரவி பிஷ்னாய் மட்டும் இழந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.