சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 முறை அரைசதம் மற்றும் 30க்கும் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6வது சதம் விளாசியதன் மூலமாக தோனியின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 108 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். 7வது விக்கெட்டுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து 227 பந்துகளில் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை காப்பாற்றினர். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 339 ரன்களை குவித்துள்ளது.

ஏனென்றால் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, 200 ரன்களை தாண்டுமா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் ரவி இந்திரனும், ரவிச் சந்திரனும் இணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணியின் கைகள் ஓங்கியுள்ளது.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கை பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 14 அரைசதங்கள், 6 சதங்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை அஸ்வின் இதுவரை 36 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20 முறை அரைசதங்களும், 30க்கும் அதிகமாக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்கள் விளாசியதன் மூலமாக தோனியின் சாதனையையும் சமன் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 90 போட்டிகளில் விளையாடி 6 சதங்களை விளாசி இருக்கிறார். தற்போது அஸ்வின் 6வது சதம் விளாசியதன் மூலமாக, தோனியின் சதங்கள் எண்ணிக்கையை சமன் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் அடிக்கும் 2வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.