கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசிய அளவில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். அனில் கும்ப்ளேவின் முக்கிய சாதனையையும் தகர்த்து இருக்கிறார். கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் முதல் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் மொஃமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ இணைந்து கூட்டணி அமைத்தனர். 51 ரன்கள் வரை அவர்கள் கூட்டணி அமைத்து ரன் சேர்த்த நிலையில், அஸ்வின் ஷான்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இது ஆசியாவில் அஸ்வினிம் 420 வது விக்கெட் ஆக அமைந்தது. அதன் மூலம் அவர் முக்கிய சாதனை ஒன்றை உடைத்து இருக்கிறார். ஆசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்த பட்டியலில் முத்தையா முரளிதரன் 612 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார்.
தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 420 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். அனில் கும்ப்ளே 419 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தற்போது அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் மற்றொரு இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் 354 விக்கெட்களை வீழ்த்தி நான்காவது இடத்தில் இருக்கிறார். ஹர்பஜன் சிங் 300 விக்கெட்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். ஆசியாவில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 420 விக்கெட்களுடன் அஸ்வின் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். 419 விக்கெட்களுடன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அனில் கும்ப்ளே இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிடும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.