சென்னை: சென்னையில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் அஸ்வின் இரண்டாம் நாள் முடிவில் சாவகாசமாக தனது உடைகளை மைதானத்தில் காய வைத்த சம்பவம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அது குறித்த வீடியோவை ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். சொந்த மைதானத்தில் அவர் சதம் அடித்தது அங்கு இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் ஓராண்டில் ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில் இதுவே சென்னை சேப்பாக்கத்தில் அவர் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம். இந்த நிலையில் இந்தப் போட்டியில் அவர் சதம் அடித்து இருப்பது நிறைவான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் அவர் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் மாலை நேரத்தில் மைதானத்தில் அவர் தனது உடைகளை காய வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சென்னையில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. அதனால், போட்டியில் வீரர்கள் கடும் வியர்வைக்கு நடுவே ஆடி வருகின்றனர். பந்துவீச்சாளர்களின் கைகளில் வழியும் வியர்வையால் பந்து ஈரமாகி விடுவதாக பும்ரா குறிப்பிட்டு இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் அஸ்வின் பேட்டிங் செய்து, பின் பவுலிங்கும் செய்து இருந்தார். அவரது மொத்த ஆடைகளும் வியர்வையில் நனைந்திருந்தன. இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தவுடன் தனது உடைகளை மைதானத்தில் புல் தரையில் வெயில் இருந்த பகுதியில் காய வைத்தார்.
அவர் சட்டை, பேண்ட், கிளவுஸ், பேடு என வரிசையாக ஒவ்வொரு ஆடை மற்றும் உபகரணமாக எடுத்து வந்து காய வைத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சியை ஒரு ரசிகர் வீடியோவாக படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்து இருக்கிறார். சொந்த மைதானமாக இருந்தாலும், அதை வீடாகவே மாற்றிவிட்டார் அஸ்வின் என அவரை சில ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான்காவது இன்னிங்க்ஸில் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.