சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விரைவில் இந்தியில் ஒரு யூட்யூப் சேனல் துவங்க இருக்கிறார். அவர் ஏற்கனவே தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வீடியோக்களை அஸ்வின் என்ற யூட்யூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். தற்போது இந்தி பேசும் மக்களுக்கு என தனியாக ஒரு யூடியூப் சேனலை துவக்க இருக்கிறார்.
அதன் பெயர் "ஆஷ் கி பாத்" எனவும் அவர் அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில், அவரது அறிவிப்புக்கு இரண்டு விதமான எதிர்வினைகள் இணையத்தில் வெளிப்பட்டு வருகின்றன. முதலில் வட இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பலரும், "அஸ்வினுக்கு இந்தி தெரியுமா? இதுவரை அவர் இந்தியில் பேசி பார்த்ததே இல்லை." என கூறி வருகின்றனர்.

மறுபுறம் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த சில ரசிகர்கள், "இது இந்தி திணிப்பின் ஒரு பகுதி" என விமர்சித்து வருகின்றனர். வேறு சிலரோ, "அஸ்வின் விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அதற்கு முன் வருமானத்துக்கான தளங்களை உருவாக்கி வருகிறார். அதன் ஒரு பகுதிதான் இது" என சுட்டிக்காட்டி உள்ளனர். வங்கதேச டெஸ்ட் தொடரில் சதம் அடித்து, 6 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில் அஸ்வின் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தற்போது 38 வயது ஆகிறது. அவரால் இன்னும் ஓரிரு ஆண்டுகளே கிரிக்கெட் விளையாட முடியும். 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நடைபெறும்.
அதற்கு முன் இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் மோத உள்ளது. இந்த போட்டிகளுடன் அஸ்வின் ஓய்வு பெற்று விடுவார் எனக் கூறப்படுகிறது.