சென்னை: ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்றுடன் 38 வயது ஆகிறது. அவர் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது. இந்திய அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கியவர் அனில் கும்ப்ளே. அவருக்கு இணையாக இருக்கும் ஒரே சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே.
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின். அவர் இன்னும் ஐந்து மாதங்களில் ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி, அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன் பின் ஆஸ்திரேலி அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த பத்து போட்டிகளில் முடிவில் 2023 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும். அதன் முடிவில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் ஓய்வு பெறுவார்கள் என கூறப்படுகிறது. டெஸ்ட் அணியில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் வகையில் வயதான வீரர்களை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் அணியில் இருந்து நீக்க பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளனர்.
தற்போது அஸ்வினுக்கு 38 வயது ஆகிறது. அவரால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலையில் அவர் இன்னும் ஐந்து மாதங்களில் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் அல்லது அதற்கு முன் அவராகவே ஓய்வை அறிவிக்கலாம். இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் என பல சுழற் பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளனர். எனவே, இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது.