சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, ஷகில் அல் ஹசன் - லிட்டன் தாஸ் கூட்டணி நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக ஆடிய இருவரையும் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ஜடேஜா வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக 2013ல் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடி வருகிறார். இதனால் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை முழுமையாக அறிந்தவர் என்றே சொல்ல முடியும். எந்த நேரத்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும், எந்த பிட்ச் எப்படி செயல்படும் என்று ஜடேஜாவுக்கு தெரியாத சீக்ரெட்டுகள் என்று எதுவும் கிடையாது.

இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஜடேஜா மிகச்சிறந்த இன்னிங்ஸில் பேட்டிங்கில் வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 124 பந்துகளில் 2 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 86 ரன்களை விளாசினார். பேட்டிங்கை தொடர்ந்து தற்போது பவுலிங்கிலும் மிரட்டலான ஆட்டத்தை ஜடேஜா வெளிப்படுத்தி வருகிறார்.
சேப்பாக்கம் பிட்ச் முதல் 3 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இதனால் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இரு அணிகளும் களமிறங்கினர். அந்த வகையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. வங்கதேசம் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் சிராஜின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வங்கதேசம் அணியின் அனுபவ வீரர்களான லிட்டன் தாஸ் - ஷகிப் அல் ஹசன் கூட்டணி இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தது. தேவையான நேரத்தில் பவுண்டரியும் அடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
இவர்களின் பார்ட்னர்ஷிப் 51 ரன்களை எட்டிய போது, அஸ்வின் - ஜடேஜா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். 29வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தில் வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் விளையாடினார். அது நேராக ஸ்கொயர் லெக் திசையில் பறக்க, அதனை துருவ் ஜுரெல் கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் அவர் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் அடுத்த ஓவரிலேயே ஷகி அப் ஹசன் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார். அந்த பந்து பேட்டில் பட்டு ஷகில் அப் ஹசன் ஷூட்டில் அடித்ததால், ரிஷப் பண்ட் எளிதாக கேட்ச் பிடித்தார்.
இதனால் அவரும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா அடுத்தடுத்த 2 ஓவர்களில் இரு அனுபவ பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தி இந்திய அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்துள்ளார். இதனால் வங்கதேசம் அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் வங்கதேசம் அணி 150 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக்கில் கொண்டு வந்துள்ளார். இதனால் வங்கதேசம் டெய்லண்டர்கள் விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தப்படும் என்று பார்க்கப்படுகிறது.