சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், தனியாளாக போராடிய ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 56 ரன்களை விளாசினார். இருந்த போதும், இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த அஸ்வின் - ஜடேஜா, 7வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய அஸ்வின் ஆட்ட நேர முடிவில் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் அடித்துள்ள 2வது சதம் இதுவாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினின் 6வது சதம் இதுவாகும். இதனால் அஸ்வினுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதன்பின் வர்ணனையாளர் ரவி சாஸ்திரியுடன் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதே ஸ்பெஷல் தான். கடந்த முறை இதே மைதானத்தில் சதமடித்த போது நீங்கள் தான் பயிற்சியாளராக இருந்தீர்கள். அதற்கான நன்றி கூற வேண்டும். அதிரடியாக ரன்கள் குவிக்க முடிந்ததற்கு டிஎன்பிஎல் தொடரில் இருந்து நேரடியாக இங்கு விளையாடியதே காரணம். அந்த தொடரில் எனது பேட்டிங்கை முன்னேற்ற பயிற்சி மேற்கொண்டேன்.
ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியில் எனது பேட்டை நன்றாக வீசி ரன்களை சேர்த்து வந்திருக்கிறேன். அதனால் இம்முறை புதிய ஷாட்களை கற்றதால், விரைவாக ரன்கள் குவிக்க முடிந்தது. சேப்பாக்கம் பிட்சை பொறுத்தவரை, கொஞ்சம் கடினமானது. பந்திற்கு பின்னால் நாம் சென்றால், ரன்கள் சேர்க்க முடியாது. ரிஷப் பண்ட் போல் அதிரடியாக விளையாடினாலே, ரன்கள் சேர்க்க முடியும். பழைய சேப்பாக்கம் மைதானத்தை போல் மீண்டும் இந்த பிட்சில் பவுன்ஸ் இருந்தது. ரெட் சாயில் பிட்சில் நம்மால் கூடுதலாக சில ஷாட்களை விளையாட முடியும்.
இந்த இன்னிங்ஸை நான் விளையாடுவதற்கு ஜடேஜா மிகவும் உதவியாக இருந்தர் என்றே சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் எனக்கு அதிகளவில் வியர்வை வெளி வந்ததோடு, சோர்வடைந்ததை ஜடேஜா கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி கொடுத்தது அவர் தான். கடந்த சில ஆண்டுகளாக ஜடேஜா இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர், ஒரு கட்டத்தில் அவர் 3 2 ரன்களை 3 ரன்களாக மாற்ற வேண்டாம் என்று கூறினார். அதுவும் எனக்கு உதவியாக இருந்தது.
நாளை இந்த பிட்ச் எப்படி செயல்படும் என்பது கணிப்பது எளிதாக இருக்காது. ஸ்பின்னர்களுக்கு சாதகம் இருந்தாலும், பவுன்ஸ் இருக்கும். ஆனால் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பிட்ச் அதன் வேலையை காட்ட தொடங்கும் என்று கருதுகிறேன். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு போதுமான உதவி கிடைக்கிறது. நல்ல பவுன்ஸ் இருப்பதால், சரியான லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும். அதேபோல் புதிய பந்தில் உதவி கிடைக்கும். நாளைய நாளின் ஆட்டத்தை மீண்டும் புதிதாக தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.