சென்னை: ரவீந்திர ஜடேஜா வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவர் 86 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில் அவர் ஒரு ரன் கூட சேர்க்காமல் 86 ரன்கள் எடுத்த நிலையிலேயே ஆட்டம் இழந்தார். அவர் செய்த ஒரு தவறால் விக்கெட்டை இழந்தார். அடுத்து இந்திய அணி விரைவாக விக்கெட்களை இழந்தது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 379 ரன்கள் சேர்த்தது. முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி இருந்தனர். 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தவித்த போது அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் அஸ்வின் 102 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் சேர்த்து இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்த ஜோடி மேலும் அதிக ரன்களை சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நாளில் 80 ஓவர்கள் வீசப்பட்டு இருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 81 வது ஓவர் வீசப்பட்டது. அந்த ஓவரை சந்தித்த ஜடேஜா ஒரு ரன் கூட சேர்க்கவில்லை. அனைத்து பந்துகளையும் தடுத்து ஆடினார்.
அடுத்து 82 வது ஓவரை சந்தித்த அஸ்வின் ஒரு ஃபோர் மட்டும் அடித்தார். அடுத்து 83 வது ஓவரை டஸ்கின் அகமது வீசினார். புதிய பந்து என்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இந்த நிலையில், 83 வது ஓவரின் முதல் பந்தில் ஷாட் அடிக்க ஆசைப்பட்ட ஜடேஜா பந்தை எட்ஜ் செய்தார். விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் அதை எளிதாக கேட்ச் பிடித்தார். இதை அடுத்து ஜடேஜா 86 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார்.
முதல் ஓவர் முழுவதும் தடுத்து ஆடி, மெய்டனாக ஆடிய ஜடேஜா 83 வது ஓவரின் முதல் பந்தில் தடுத்து ஆடாமல் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழந்தார். அதன் மூலம் ஐந்தாவது டெஸ்ட் சதம் அடிக்கும் வாய்ப்பையும் நழுவ விட்டார். மேலும், ஏழாவது விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்து இருந்த அஸ்வின் - ஜடேஜா கூட்டணியும் முடிவுக்கு வந்தது.
ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழந்த பின் வந்த ஆகாஷ் தீப் 17 ரன்கள் சேர்த்தார். அதன்பின் அஸ்வின் 113 ரன்கள் எடுத்த நிலையில் டஸ்கின் அகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பின் பும்ராவும் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச வேகப் பந்துவீச்சாளர்கள் ஹசன் முகமது ஐந்து விக்கெட்களும், டஸ்கின் அகமது மூன்று விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர்.
ஜடேஜாவின் தவறால் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. மேலும், 400 ரன்களுக்கும் மேல் ரன் குவிக்கும் வாய்ப்பையும் இழந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி புதிய பந்தை வைத்து இந்திய அணியின் விக்கெட்களை வீழ்த்தியது.