சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரையன் டென் குல்தீப் யாதவுக்கு தனிப்பட்ட முறையில் பேட்டிங் பயிற்சி அளித்து வந்தார். அதன் மூலம் குல்தீப் யாதவை ஒரு ஆல் ரவுண்டராக மாற்றும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் இறங்கி உள்ளது. ரவீந்திர ஜடேஜாவை கவுதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து விலக்கி வைத்து இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் விளையாடினார். அதன் பின் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் 2024 ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை என தொடர்ந்து பெரிய தொடர்களில் விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இலங்கை ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு கூட ஓய்வு அளிக்கப்படவில்லை. அவர்கள் மூத்த வீரர்கள் என்றாலும் ஒருநாள் தொடரில் விளையாடினார்கள். ஆனால், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு நாள் தொடரில் அவர் கேட்காமலேயே ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார்.
ஆனாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. இந்திய அணி அடுத்தகட்டமாக இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டும் என்பதில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதியாக இருக்கிறார். அதனால், இனி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறையும். குல்தீப் யாதவ் தற்போது பேட்டிங் பயிற்சி செய்து வருவதும் அதன் ஒரு பகுதி தான்.
மேலும், லெக் ஸ்பின் வீசும் ஆற்றல் கொண்ட துவக்க வீரர் ஜெய்ஸ்வால் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அவரை மூன்றாவது ஸ்பின்னராக பயன்படுத்த இந்திய அணி திட்டமிட்டு இருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சென்னையில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட்டில் நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும். ஏனெனில், சென்னை அவரது சொந்த ஊர் என்பதாலும், சேப்பாக்கம் மைதானத்தில் அவர் அதிக உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்பதாலும் அவரை நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்த்துத் தான் ஆக வேண்டும்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களை காட்டிலும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும். மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களைத் தான் இந்திய அணி தேர்வு செய்யும். சென்னை டெஸ்ட்டில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் யாஷ் தயாள் வேகப் பந்துவீச்சாளர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் சுழற் பந்துவீச்சாளர்களாக இடம் பெறுவார்கள்.