மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் 3 வடிவங்களுக்குமான அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார். இந்த ரேஸில் இந்திய அணியின் 2 இளம் வீரர்கள் முன்னணியில் இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முகமது ஷமியை தவிர்த்து அத்தனை சீனியர் வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர். 16 பேர் கொண்ட இந்திய அணியில் யாஷ் தயாளுக்கு இடம் கொடுத்திருப்பதன் மூலமாக இடதுகை வேகப்பந்துவீச்சாளரை தீவிரமாக தயார் செய்து வருவது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. 37 வயதாகும் ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இதனால் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த டி20 உலகக்கோப்பை வரை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களை வெல்ல வேண்டும் என்று ரோஹித் சர்மா சூளுரைத்துள்ளார்.
இதனால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை கேப்டன்சியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் கேப்டன்சியை யார் கைப்பற்றுவார்கள் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் ஜஸ்பிரிட் பும்ரா, சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் என்று 4 கேப்டன்கள் இருக்கின்றனர்.
இவர்கள் 4 பேருமே இந்திய அணியை ஏற்கனவே வழிநடத்திய அனுபவம் கொண்டவர்கள். அதிலும் கேஎல் ராகுல் மற்றும் பும்ரா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே இந்திய அணியை வழிநடத்தி இருக்கின்றனர். இதனால் யாருக்கு கேப்டன்சி செல்லும் என்பதே குழப்பமாக அமைந்துள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், அடுத்த கேப்டன் என்று சொல்லும் போது 2 பெயர்கள் என் மனதில் தோன்றுகிறது.
ஒன்று சுப்மன் கில், மற்றொரு பெயர் ரிஷப் பண்ட். இரு இளம் வீரர்களுக்கும் இந்திய அணியை வழிநடத்தும் தகுதியும், திறமையும் இருப்பதாக பார்க்கிறேன். அதேபோல் தற்போது இருவருமே ஐபிஎல் தொடர்களில் கேப்டன்களாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் இந்திய அணியையும் வழிநடத்திவிட்டனர். அதனால் வரும் காலத்தில் இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான கேப்டனாக இருவரில் ஒருவர் செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். 2022ல் நடந்த கார் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் கேப்டன்சிக்கு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. அதேபோல் பும்ரா பிரீமியர் பவுலர் என்பதோடு, காயமடைந்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. கேப்டன்சி தேர்வில் காயம் மற்றும் ஃபிட்னஸ் இரண்டும் முக்கிய பங்காற்றும் என்பது ஹர்திக் பாண்டியா - சூர்யகுமார் யாதவ் விவகாரத்திலேயே பலருக்கும் புரிய வந்தது.