ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இமாலய ஸ்கோரை அடித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதன் பின்னணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் போட்ட திட்டம் ஒன்று உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது.
ஹைதராபாத் உப்பல் மைதானம் டி20 போட்டிகளில் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்களை சர்வசாதாரணமாக அடித்து இருந்தது. அதனால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் அந்த அளவுக்கு ரன்களை குவிக்க வேண்டும் என இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்.

மேலும், கடந்த இரண்டு போட்டிகளில் நல்ல துவக்கம் பெற்றும் அதை பெரிய ஸ்கோராக மாற்றாத சஞ்சு சாம்சனுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கி இருந்தார். கிட்டத்தட்ட இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்ற நிலையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார். அவர் அதிரடி ஆட்டத்தை துவக்கி வைத்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் அதை அப்படியே தொடர்ந்தனர்.
இதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 297 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் கடந்தார். அதன் பின் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி இந்த போட்டிக்கு முன்பே 250 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு களம் இறங்கியதால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது.
இதை செய்தது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என சுட்டிக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள். அவர் பயிற்சியாளராக பதவி ஏற்றதில் இருந்து இந்திய அணி எப்போதும் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிதான ஆட்டம் ஆடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதிலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்றால் 200 ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு முன் இருந்தது.
ஆனால், தற்போது அவர் அதை 250 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதாக மாற்றி இருக்கிறார் கம்பீர். தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இது சாத்தியமான ஒரு விஷயமாகவே இருக்கிறது. அந்த வகையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் ஆட்டத்தை ஒரு படி மேலே உயர்த்தி இருக்கிறார்.
இனி இந்திய அணி என்றாலே அதிரடியாக ஆடக்கூடிய அணி என்பதாக ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இது டி20 போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் கூட இந்திய அணி இதேபோல ஆடியதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்ததை சுட்டிக்காட்டுகின்றனர்.