அனந்தபூர்: இந்திய டி20 அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார் ரிங்கு சிங். எனினும், அவருக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன் பின் அவர் இந்திய டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் முன் வைத்து வந்தனர்.
ரிங்கு சிங்கின் உள்ளூர் டெஸ்ட் போட்டி சராசரி 54 ஆக உள்ளது. இத்தனை சிறப்பான பேட்டிங் சராசரி வைத்துள்ள ரிங்கு சிங்குக்கு ஏன் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

அதற்காக நான்கு உள்ளூர் அணிகளை பிசிசிஐ அறிவித்தது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதில் ரிங்கு சிங்கின் பெயர் இடம் பெறவில்லை. அதை எதிர்த்து ரசிகர்கள் பலரும் பிசிசிஐ-யை விமர்சனம் செய்தனர். வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்த பின் இரண்டாவது சுற்று துலீப் டிராபி போட்டியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.
இந்தியா பி அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் இந்தியா சி அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளை சந்தித்து வெறும் 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து ரிங்கு சிங்கின் செயல்பாட்டின் மீது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. துலீப் டிராபி தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு அந்த இரண்டு டெஸ்ட் தொடர்களின் போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். அந்த வகையில் வெறும் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த ரிங்கு சிங் தனக்கான வாய்ப்பை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இந்தியா சி மற்றும் இந்தியா பி அணிகள் மோதிய துலீப் டிராபி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணி 525 ரன்கள் குவித்தது. அடுத்து இந்தியா பி அணி ஆடியது. அப்போது அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்களும், ஜெகதீசன் 70 ரன்களும் குவித்தனர். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். சர்ஃபராஸ் கான் 16 ரன்கள் எடுத்தும், ரிங்கு சிங் 6 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இந்தியா பி அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் மட்டுமே எடுத்தது. நான்கு நாள் மட்டுமே கொண்ட இந்தப் போட்டியில் இந்தியா சி அணி நான்காவது நாள் அன்று இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதை அடுத்து ரிங்கு சிங்கிற்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இனி வரும் போட்டிகளில் அவர் அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே அவருக்கான வாய்ப்பு கிடைக்கும்.