மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் இடம்பெறுவாரா இல்லை ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்தியா இருக்கின்றது.
கில், ஜெய்ஸ்வால், பும்ரா, அக்சர் பட்டேல் போன்ற ஸ்டார் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. இதன் காரணமாக குவாலியரில் நடைபெறும் போட்டியில் பிளேயிங் லெவனில் ரிங்கு சிங்கை சேர்க்கலாமா இல்லை ரியான் பராக்கை சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்திய டி20 அணியின் ஃபினிஷராக கருதப்படக் கூடியவர் ரிங்கு சிங்.

ரிங்கு சிங் தனது அதிரடி ஆட்டத்தால் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தார். எனினும் அவருக்கு டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் ரிங்கு சிங்கிற்கு நிரந்தர இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பயிற்சியாளரான கம்பீர் பந்து வீச தெரிந்த பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். இதன் காரணமாக ரியான் பராகிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், ரியான் பராகிற்கு இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் கிடைக்குமெனில் இது நெருக்கடியான கட்டத்தில் உதவும். அதுமட்டுமல்லாமல் அவர் முக்கியமான சூழல்களில் விக்கெட்டுகளும் எடுக்கக் கூடியவராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதனால் ரிங்கு சிங்கிற்கு பதில் ரியான் பராக்கிற்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. அதே சமயம் இந்திய டி20 அணியில் இருந்து சிவம் துபே காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் ஃபினிஷருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ரிங்கு சிங், சிவம் துபே இடத்தில் விளையாட கூடும் என தெரிகிறது.அதே சமயம் இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
சிவம் துபேக்கு பதில் ஆல்ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டியை பயன்படுத்த கம்பீர் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஹர்ஷித் ரானா அல்லது மாயங் யாதவ் இருவர்களில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இந்திய அணி இரண்டு முழு நேர வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால் பிளேயிங் லெவனில் ரியான் பராக், நிதீஷ்குமார் மற்றும் ரிங்கு சிங் என மூன்று வீரர்களுக்குமே வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.