சென்னை: முகமது சிராஜ் ரிவ்யூ கேட்கலாமா? என கேட்டதற்கு ரிஷப் பண்ட் கேட்க வேண்டாம் என தவறான அறிவுரையை வழங்கினார். அவர் செய்த தவறு பின்னர் வெட்ட வெளிச்சமானது. அதனால், முகமது சிராஜ், ரிஷப் பண்ட் மீது கடும் கோபம் கொண்டார். அதை கண்டு கேப்டன் ரோஹித் சர்மா சிரித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 376 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது. அப்போது பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் விக்கெட் வேட்டையாடத் துவங்கினர். முகமது சிராஜ் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் ஜாகீர் ஹாசனுக்கு பந்து வீசினார். அந்த பந்து அவரது காலை உரசிச் சென்றது. பந்து நேராக சென்றதால் நிச்சயம் அது எல்பிடபுள்யூ அவுட் என முகமது சிராஜ் கொண்டாட்டத்தில் இருந்தார். ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை.
அப்போது மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ கேட்கலாமா? என விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-இடம் முகமது சிராஜ் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கேட்டனர். அப்போது ரிஷப் பண்ட், "பந்து அதிக உயரம் சென்றது. மேலும், லெக் திசையில் தான் பந்து சென்றது" என்றார். அதனால், ரிவ்யூ கேட்க வேண்டாம் என கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த பந்துக்கான ரீப்ளே மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காட்டப்பட்டது. அப்போது அது எல்பிடபுள்யூ அவுட் என தெரிய வந்தது. இதை அடுத்து முகமது சிராஜ் ரிஷப் பண்ட்டை முறைத்து பார்த்தார். ரிஷப் பண்ட் இரண்டு கைகளையும் தூக்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதை பார்த்து ரோஹித் சர்மா சிரித்தார்.
பின்னர் ஜாகீர் ஹாசன் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். முகமது சிராஜ் 10.1 ஓவரில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ரிஷப் பண்ட் செய்த தவறால் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார். பும்ரா நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஜடேஜா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸில் 81 ரன்கள் எடுத்து 3 விக்கெட்களை இழந்து இருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா மேலும் ரன் குவித்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
களத்தில் இருக்கும் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்க்ஸில் செய்தது போல தவறுகளை செய்யாமல் இரண்டாவது இன்னிங்க்ஸில் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.