சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் வெறும் 39 ரன்கள் எடுத்து மோசமான முறையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த விதம் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை அதிருப்தியில் ஆழ்த்தியது. மறுபுறம் வங்கதேச வீரர்களும் அவர் ஆட்டம் இழந்ததை பார்த்து கிண்டல் செய்யும் வகையில் பேசினர். அதனால் ரிஷப் பண்ட் கோபத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 56 ரன்கள் சேர்த்தார். ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

ஓரளவு ரன் சேர்த்து வந்த ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் வீசிய பந்தை அடிக்க முயன்றார். அவுட் சைட் ஆஃப் திசையில் சென்ற அந்த பந்தை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே அடிக்க வேண்டும் என்றால் அதை முன்கூட்டியே முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ரிஷப் பண்ட் மிக தாமதமாக அந்த பந்தை அடிக்க முடிவு செய்து பேட்டை கொண்டு சென்றார்.
ஆனால், அதற்குள் பந்து நன்றாக அவுட் சைட் ஆஃப் திசையில் சென்றது. அப்போது ரிஷப் பண்ட்டின் பேட்டில் பட்ட பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் கைகளுக்கு சென்றது. ரிஷப் பண்ட் கேட்ச் கொடுத்து அதிருப்தியுடன் பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது வங்கதேச வீரர்கள் அவரை சீண்டும் வகையில், "கடவுள் கொடுக்கும்போது மிகவும் பெரிதாக கொடுப்பார்" என்று கூறினர்.
அதை கேட்டு ரிஷப் பண்ட் மேலும் கோபமடைந்தார். அதே வீடியோவில் கவுதம் கம்பீர் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்து கடும் அதிருப்தியுடன் தலையை அசைத்ததும் தெரிய வந்தது. ரிஷப் பண்ட் இதே போலவே ஒவ்வொரு முறையும் நன்றாக ரன் சேர்த்து ஆடிக் கொண்டிருக்கும் போது தவறான நேரத்தில் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறி கொடுத்து வருகிறார்.
இதனால் அவர் பொறுப்பில்லாமல் ஆடுவதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து சென்ற பின் இந்திய அணியில் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் அஸ்வின் 199 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். ஜடேஜா 86 ரன்களும், அஸ்வின் 113 ரன்களும் சேர்த்து இருந்தனர். இந்திய அணி 376 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்திய ஹசன் மஹ்மூத் மொத்தமாக 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடிய மோசமான ஆட்டம் விமர்சனத்தில் இருந்து தப்பியது.