மும்பை : இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் முதல் நாளில் வெறும் 35 ஓவர்கள் தான் வீசப்பட்டது. இதில் வங்கதேச அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து இரண்டாவது நாளும், மூன்றாவது நாளும் மழை மற்றும் மைதானம் சேதமடைந்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நான்காவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது.

இதில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை அடித்து விட்டு பிறகு வங்கதேச அணியின் 10 விக்கெட்டையும் எடுக்க வேண்டும். இதனால் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர்.
குறிப்பாக டி20 கிரிக்கெட் போல் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடினர். முதல் மூன்று ஓவர்களில் 50 ரன்கள் இந்திய அணி வீரர்கள் அடித்தனர். அது மட்டும் இல்லாமல் 10 புள்ளி ஒரு ஓவரில் 100 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை இந்தியா படைத்தது. இந்த நிலையில் அதிவேகமாக ரன்களை எடுக்க வேண்டும் என்பதற்காக கம்பீர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு ரிஷப் பண்ட்டை அனுப்பினார்.
பண்ட் எப்போதும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க கூடியவர். இதனால் அவருக்கு ஏற்ற சூழலில் களம் இறங்கி அவர் 25 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்த்தார். பண்ட் மட்டும் அதிரடியாக ஆடி இருந்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் நாளை மதியத்திற்குள்ளே 400 ரன்கள் குவித்திருக்கும்.
இதன் மூலம் வங்கதேச அணி 170 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடி இருக்கும். அப்போது, வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளையும் விரைவாக இந்தியா வீழ்த்தி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். இந்த சூழலில் பண்ட் ஒரு ஆள் தடுமாறி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.