ரிஷப் பண்ட் நிலை
ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாகவே சரியான பார்மில் இல்லை. 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு அவரை தயார் செய்து வருகிறது இந்திய அணி. எனினும், அவர் இதுவரை சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பி வருகிறார்.
பார்ம் அவுட்
உலகக்கோப்பை தொடரில் இந்திய ஒருநாள் அணியில் ஆடிய பண்ட், அதன் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்களில் ரன் குவிக்கவில்லை. அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
டெஸ்ட் அணி பின்னடைவு
இந்திய அணி நிர்வாகம் டி20 போட்டிகளில் அவருக்கு அதிக வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது. ஆனால், டெஸ்ட் அணியில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முதல் அவருக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. விரிதிமான் சாஹா, விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
வங்கதேச டி20 தொடர்
வங்கதேச டி20 தொடரிலும் ரிஷப் பண்ட் எந்த வகையிலும் ஈர்க்கவில்லை. பேட்டிங்கில் சொதப்பலாக ஆடினார். எனினும், அவருக்கு தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு வழங்குவதில் உறுதியாக இருந்தது
வெ.இண்டீஸ் தொடர்
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் நிச்சயம் ஆடும் அணியில் இடம் பெறுவார் என கூறி இருக்கிறது தேர்வுக் குழு.
பயிற்சி தேவை
ஏற்கனவே, பார்ம் அவுட்டில் இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு அந்த தொடருக்கு முன் கூடுதல் பயிற்சி அளிக்க முடிவு செய்த இந்திய அணி, தற்போது நடந்து வரும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் அவரை ஆடவைக்க முடிவு செய்தது.
மாற்று வீரர் யார்?
சற்றே தாமதமாக எடுக்கப்பட்ட இந்த முடிவால், பண்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளுக்கு பின் நீக்கப்பட்டு, ஸ்ரீகர் பரத் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இரண்டாம் நாள் காலையில் இந்திய அணியுடன் இணைய உள்ளார்.
ஷுப்மன் கில் விடுவிப்பு
அதே போல, ஷுப்மன் கில் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பங்கேற்க அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஷுபம்ன் கில் டெஸ்ட் அணியில் மட்டுமே மாற்று வீரராக இடம் பெற்று வருகிறார்.
இனி டெஸ்ட் வாய்ப்பு?
ஸ்ரீகர் பரத் டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இனி ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.