சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் ஈரப்பதமாகவும் வானம் மேகமூட்டத்துடனும் இருந்ததால் களச் சூழல் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
இதனை பயன்படுத்திக் கொண்ட வங்கதேச வீரர்கள் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த கில் தேவையில்லாமல் ஒரு ஷார்ட் அடிக்கப்போய், டக் அவுட் ஆனார்.

இதனால் இந்திய அணி 34 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் ஜெய்ஸ்வாலும் , ரிஷப் பண்டும் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் மேல் சேர்த்தது. ஒரு பேட்ஸ்மேன் அபாரமாக விளையாடி வந்தால் அவர்களுடைய கவனத்தை சிதறடிக்க அவர்களை வெறுப்பேற்றும் வகையில் எதிர் அணி வீரர்கள் செயல்படுவார்கள்.
இப்படி ஒரு யுத்தியை ஆஸ்திரேலியா செய்யும். தற்போது அதேபோல் ஒரு யுக்தியை இன்று வங்கதேசம் செய்தது. ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி வந்த நிலையில், அவரை கோபப்படுத்தும் விதமாக பந்தை வேண்டும் என்று அவர் மீது எறிய முற்படுவது போன்ற செயலில் வங்கதேச வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் கடுப்பான பந்த், லித்தன் தாஸிடம் சென்று எதற்கு என் மீது பந்தை எரிகிறாய் என்று கோபமாக கேட்டார்.
அதற்கு லிட்டன் தாஸ் பந்தை நான் அவருக்கு கொடுக்க வேண்டும் அல்லவா? என்று பதில் அளித்தார். இதை அடுத்து இருவரும் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் ரிஷப் பண்ட், கவனம் சிதறியது. இதை அடுத்து சில ஓவர்களுக்கு பிறகு பண்ட் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணியின் முக்கிய வீரராக பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்குகிறார். இதனால் அவரை கோபப்படுத்தி அவருடைய விக்கெட்டை வீழ்த்தும் தந்திரத்தில் வங்கதேசம் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டது. வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசி தற்போது அபாரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.