சென்னை: இந்திய டெஸ்ட் அணியில் கே எல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா?, இந்திய அணியில் அவரது நிலை என்ன? என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, கேஎல் ராகுலுக்கு அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும் என நாங்கள் சொல்லி இருக்கிறோம் என பதில் கூறி இருக்கிறார்.
இதை அடுத்து கே எல் ராகுல் அழுத்தத்தில் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசினார். சுமார் 47 நாட்கள் இடைவெளிக்கு பின் இந்திய அணி மீண்டும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் கே எல் ராகுல் பற்றிய கேள்வி எழுந்தது. அவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 86 ரன்கள் சேர்த்தார். ஆனால், அதன் பின் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் அணியில் இருந்து விலகினார்.
தற்போது அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கிறார். கே எல் ராகுல் இல்லாத போது சர்ஃபராஸ் கான் டெஸ்ட் அணியில் அவரது இடத்தில் ஆடினார். அவர் மூன்று போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்து இருந்தார். இதை அடுத்து பிளேயிங் லெவனில் யார் இடம் பெறுவார்கள்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கே எல் ராகுல் போட்டிகளில் களம் இறங்குவாரா? என ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, "கேஎல் ராகுல் உடைய திறமை என்ன என்று எங்களுக்கு தெரியும். உலகிலேயே மிகச் சில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே தங்கள் கிரிக்கெட் வாழ்வில் சுமுகமான நிலையில் இருந்துள்ளனர். மற்ற அனைவருக்கும் மேடு, பள்ளங்கள் நிச்சயம் இருந்துள்ளது. நாங்கள் கே எல் ராகுலுக்கு தெளிவான செய்தியை கூறி இருக்கிறோம். அவர் அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும். அதுதான் எங்களுக்கு வேண்டும்." என்றார்.
மேலும், "அவர் தென்னாப்பிரிக்காவில் அபாரமாக ஆடினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 80 ரன்கள் சேர்த்தார். அதை வைத்து அவரது திறமையை நாங்கள் கண்டு கொள்ள முடியும். அதே சமயம், நாங்கள் சரியான செய்தியை அவருக்கு சொல்ல வேண்டும் என்பதும் முக்கியம். அவர் இனியும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம். ஸ்பின்னர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் நல்ல ஆட்டத்தை வைத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாட மாட்டார் என சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை." என்று ரோஹித் சர்மா கூறி இருக்கிறார்.
இதன் மூலம் கே எல் ராகுல் தொடர்ந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் இனியும் காயத்தால் பாதி தொடரில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவரது இடத்தை சர்ஃபராஸ் கான் அல்லது வேறு ஒருவருக்கு அளித்து விடுவோம் என்பதை தான் ரோஹித் சர்மா மறைமுகமாக கூறி இருக்கிறார்.