கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிராக கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அழுத்தம் கொடுக்கும் வகையில் வியூகம் அமைத்தார். அதை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர்.
இதை அடுத்து இந்திய அணிக்கு 95 ரன்கள் என்ற சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை இந்தியா எளிதாக எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் நாள் அன்று 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களும் மழையாலும், மோசமான ஆடுகளத்தாலும் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

அதன் பின் நான்காவது நாள் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து 285 ரன்கள் சேர்த்தது. அதன் பின் மீண்டும் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. அப்போது அந்த அணியை விரைவாக ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி.
அதற்கு ஏற்ப கடுமையான ஃபீல்டிங் வியூகத்தை அமைத்தார் ரோஹித் சர்மா. வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது நான்கு ஸ்லிப் ஃபீல்டர்கள் மற்றும் ஒரு கல்லி
பீல்டர் நிறுத்தப்பட்டனர். மேலும், சில்லி பாயிண்ட் திசையில் ஒரு ஃபீல்டர் நின்று இருந்தார். இவ்வாறாக பேட்ஸ்மேனை சுற்றிலும் ஆறு அல்லது ஏழு ஃபீல்டர்கள் எப்போதும் இருக்கும் வகையில் அவர் வியூகம் அமைத்தார்.
அதனால், வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் கடும் அழுத்தத்திற்கு ஆளானார்கள். எந்த ஒரு பந்தையும் அருகே அடிக்க முடியாமல் திணறினர். அதனாலேயே, இந்திய அணிக்கு விரைவாக விக்கெட்கள் கிடைத்தன. பும்ரா மூன்று விக்கெட்களும், ஜடேஜா மூன்று விக்கெட்களும், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் வீழ்த்தினார். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பின் இந்திய அணிக்கு 95 ரன்கள் என்ற சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை இந்திய அணி 17.2 ஓவர்களில் எட்டியது.