லக்னோ: இராணி கோப்பையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக களமிறங்கிய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ருதுராஜ் முக்கியமான சான்ஸை மிஸ் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படவில்லை. நட்சத்திர தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்ட போதும், ருதுராஜ் கெய்க்வாட் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஜிம்பாப்வே டி20 தொடரிலும் ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான பேக் அப் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் பேக் அப் வீரர்களாக குல்தீப் யாதவ், அக்சர் படேல், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.
இதில் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவருக்குமே டாப் ஆர்டரில் விளையாடிய அனுபவமில்லை. அதேபோல் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கில் செயல்படவில்லை. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் ஜெய்ஸ்வால் கட்டம் கட்டப்பட்டால், இந்திய அணி பின்னடைவை சந்திக்க நேரிடும்.
ஏனென்றால் ஜெய்ஸ்வாலுக்கு ஷார்ட் பால் பிரச்சனை இருக்கிறது. ஷார்ட் பால்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆஸ்திரேலியா மண்ணில் பேட்ஸ்மேன்களால் தப்பிக்க முடியும். இதனால் இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்-ஐ பேக் அப் தொடக்க வீரராக அழைத்து செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே துலீப் டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகவே விளையாடி இருந்தார்.
இதனால் அவரை தொடர்ச்சியாக ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செதுள்ளது. இதன் காரணமாகவே இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான இராணி கோப்பை போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ஏற்கனவே மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்களை குவித்துள்ளது. யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் என்று நட்சத்திர வீரர்கள் இருந்த போதும், ருதுராஜ் கெய்க்வாட்-ஆல் அவர்களின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த முடியவில்லை. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மீதும் சில விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது பேட்டிங்கிலும் சொதப்பி இருப்பதால், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நட்சத்திர வீரரான அபிமன்யூ ஈஸ்வரன் துலீப் டிராபி தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் இராணி கோப்பை போட்டியிலும் அரைசதம் கடந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் ருதுராஜ், அபிமன்யூ ஈஸ்வரன் இருவரில் யாருக்கு பேக் அப் தொடக்க வீரர் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.