அனந்தபூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணியின் நட்சத்திர வீரர் ரியான் பராக் 73 ரன்கள் எடுத்திருந்த போது, டீப் கவர்ஸ் திசையில் அடித்த பந்தை பறவை போல் பறந்து சென்று ஒற்றை கையில் ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் பிடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேட்சை எப்படி பிடித்தார் என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
துலீப் டிராபி தொடரின் கடைசி சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் இந்தியா ஏ அணியை எதிர்த்து இந்தியா சி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி 297 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஷஷ்வத் ராவத் 250 பந்துகளில் 124 ரன்களையும், ஆவேஷ் கான் 68 பந்துகளில் 51 ரன்களையும் சேர்த்தனர்.

இந்தியா சி அணி தரப்பில் விஜய்குமார் வைஷாக் 4 விக்கெட்டுகளையும், அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், கவுரவ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய இந்தியா சி அணி அயூப் கான் மற்றும் ஆவேஷ் கான் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 82 ரன்களையும், புல்கிட் நரங் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் காரணமாக 2வது இன்னிங்ஸை இந்தியா அணி 63 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. 3வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் பிரதாம் சிங் 11 ரன்களிலும், திலக் வர்மா 19 ரன்களிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 34 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் இணைந்த ரியான் பராக் - ஷஷ்வத் ராவத் கூட்டணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதிரடியாக விளையாடிய ரியான் பராக் அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி வேகமாக பயணித்தார். அதேபோல் இருவரும் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்திருந்தது. அப்போது கவுரவ் யாதவ் பவுலிங்கில் ரியான் பராக் கவர்ஸ் திசையில் சிக்ஸ் அடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த பந்து போதுமான உயரம் செல்லவில்லை. அந்த பகுதியில் எந்த ஃபீல்டரும் இல்லாததால், பவுண்டரி செல்லும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் கவர்ஸ் திசைக்கு வெளியில் ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட், திடீரென ஓடி வந்து பறவையை போல் பறந்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். ஒரு நிமிடம் களத்தில் என்ன நடந்தது என்று புரியாமல் ரியான் பராக் மிரண்டு போனார். அதிலும் சரியான டைமிங்ஸில் பறந்து ஒற்றை கையில் ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனால் ரியான் பராக் 101 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து சோகத்துடன் வெளியேறினார். இதன்பின் 3வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்தியா சி அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலமாக 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளைய ஆட்டத்தின் முதல் செஷனில் இந்தியா ஏ அணியை விரைவாக வீழ்த்தினால், இந்தியா சி அணி வெல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.