பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதனால் விரைவில் இந்திய டெஸ்ட் அணியிலும் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பே ருதுராஜ் கெய்க்வாட் கைகளில் காயம் ஏற்பட்டதோடு, காய்ச்சலிலும் சிக்கினார். இதனால் அந்த டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன்பின் இந்திய அணியில் இடம்பிடிப்பதே ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பிரச்சனையாக மாறியது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய போதும், டி20 உலகக்கோப்பையில் பேக் அப் வீரராக கூட தேர்வு செய்யப்படவில்லை. அதன்பின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
ஆனால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு தரப்பினரும் ருதுராஜ் கெய்க்வாடை பிசிசிஐ புறக்கணிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணியின் கேப்டனாக ருதுராக் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவருக்கு திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக பார்க்கப்பட்டது.
முதல் சுற்றுக்கான துலீப் டிராபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 46 ரன்களை விளாசினார். இந்த நிலையில் துலீப் டிராபி 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் காயத்துடன் போராடிய ருதுராஜ் கெய்க்வாட் 74 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 58 ரன்களை விளாசினார்.
இதன்பின் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 73 பந்துகளில் அரைசதம் விளாசி களத்தில் இருக்கிறார். இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்துள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட், ஃபார்மில் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நிகரான இந்திய வீரர் தற்போது இல்லை என்று கூட சொல்லலாம்.
ஏனென்றால் எந்தவொரு ஸ்பின்னரையும் டவுன் தி ட்ராக் இறங்கி வந்து ருதுராஜ் கெய்க்வாட் பொளந்து கட்டிவிடுவார். ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது பல்வேறு முறை ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின் ஹிட்டர் என்பதை நிரூபித்திருக்கிறார். இதனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் பேக் அப் வீரராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும் முன்னேறி வருவதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுவரை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டுள்ளார். தற்போது துலீப் டிராபி தொடரில் கேப்டன்சியை மேற்கொண்டுள்ளதோடு, அடுத்ததாக மகாராஷ்டிரா அணியை ரஞ்சி டிராபி தொடரிலும் வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.