மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பிசிசிஐ ருதுராஜ் கெய்க்வாட் விவகாரத்தில் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணியை தயார்ப்படுத்தும் வகையில், இந்திய ஏ அணிக்காக தொடர்களில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி விளையாடி வரும் சூழலில், அடுத்ததாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க உள்ளதால், அந்த போட்டிக்கு மட்டும் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடி வரும் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. 2வது மற்றும் 3வது ஆகிய ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் திலக் வர்மா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அணியில் ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷி ஷெட்கே, விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுதுவிர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல், பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, சிமர்ஜீத் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இராணி கோப்பைக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் 6 மாதம் ஓய்வு கோரி இருப்பதால், அவர் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ரஜத் பட்டிதர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக சுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி மிகச்சிறந்த தொடக்க இணையாக பார்க்கப்பட்டது. அண்மையில் நடந்த புச்சிபாபு தொடரிலும் கூட ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அதேபோல் துலீப் டிராபியில் ஜஸ்ட் மிஸ்ஸில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
ஆனால் இந்திய ஏ அணி விளையாடும் ஒருநாள் தொடருக்கான அணியில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படவில்லை. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்காக ருதுராஜ் கெய்க்வாட் போராடி வரும் நிலையில், பிசிசிஐ அரசியல் செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.