மும்பை : இந்திய வங்கதேசம் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்குள் தான் இருக்கின்றது. இந்த நிலையில் இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக தான் இருக்கும்.
ஆனால் சேப்பாக்கம் ஆடுகளத்தில் களிமண்ணை கலந்து பிசிசிஐ தயார் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் முற்றிலும் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்த ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தற்போது வெயில் கொளுத்தி எடுக்கின்றது. எனினும் போட்டியின் ஐந்தாவது நாள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு தான் ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசன் என்ற அனுபவிக்க பவுலர் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக அவர் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 19 முறை 5 விக்கெட்டுகளை ஷகிபுல் ஹசன் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் ஷகிபுல் ஹசன் விளையாடும் போது நிச்சயம் அவர் ஒரு பெரிய ஆபத்தாக இருப்பார்.
இதேபோன்று வங்கதேச அணியில் மெஹந்தி ஹசன் என்ற பவுலர் இருக்கிறார். அவர் தனி ஆளாக கடந்த முறை இந்தியாவை தோற்கடித்தார் என்பதை மறந்து விட வேண்டாம். இது மட்டுமல்லாமல் தைஜூல் இஸ்லாம் என்ற சுழற் பந்துவீச்சாளர் இருக்கிறார். அவருக்கும் அனுபவம் இருக்கின்றது.எனவே வங்கதேசத்தில் தலைசிறந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
இதேபோன்று முஸ்பிகுர் ரஹீம் என்ற சுழற் பந்துவீச்சை எளிதில் எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் இருக்கின்றார். இதனால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்தால் அது இந்தியாவுக்கு தான் பிரச்சனையை கொடுக்கும்.இதேபோன்று இந்தியா ஆடுகளங்களில் புற்களை அதிகமாக வைத்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையும் நம்மால் தயாரிக்க முடியாது.
ஆனால் பந்து திரும்பும்போது சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் அண்மைக்காலமாக தடுமாறி வருகிறார்கள். வங்கதேசத்திலும் மூன்று ஸ்பின்னர்கள் இருப்பதால் இந்திய அணி இம்முறை வங்கதேசத்தை வீழ்த்துவது கடினமாக தான் இருக்கும்.
எனவே என்னை கேட்டால் கொஞ்சம் பேட்டிங் இருக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா தயாரிக்க வேண்டும். அப்போதுதான் பேட்ஸ்மேன்கள் வங்கதேச சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக தடுமாற மாட்டார்கள் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். அவர்களுக்கு சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது அல்வா சாப்பிடுவது போல் ஆகும். ஆனால் தற்போது விராட் கோலியே அண்மை காலமாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறி வருகிறார். இதனால் இந்திய அணி தங்களுக்கு இருக்கும் பலவீனத்தை சரி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.