சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தலா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர். அவர்களது மோசமான ஆட்டம் காரணமாக பலரும் அவர்களை விமர்சித்து வருகின்றனர். அஸ்வினை பார்த்து அவர்கள் பேட்டிங் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா துலீப் டிராபி உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடாதது தான் அவர்களது மோசமான பேட்டிங்கிற்கு காரணம். அதனால் தான் இரண்டு நல்ல பந்துகளை சந்தித்த உடன் ரோஹித் திணறினார் என விளாசி இருக்கிறார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ரோஹித் சர்மா 6 ரன்களும், சுப்மன் கில் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து விராட் கோலி 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் ஜெய்ஸ்வால் 56, ஜடேஜா 86, அஸ்வின் 113 ரன்கள் சேர்த்து இந்திய அணியை மீட்டனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 91.2 ஓவர்களில் 376 ரன்கள் சேர்த்தது.
இந்த நிலையில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நடந்த துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்காதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், "இது போன்ற பிட்ச்களில் பேட்டிங் செய்யும் போது முதல் ஒரு மணி நேரம் மிகவும் கடினமாக இருக்கும் அல்லது முதல் பகுதி ஆட்டம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்." என்றார்.
மேலும், "இங்கு பயிற்சியின் போது ரோஹித் சர்மாவும் பவுலிங் வீசி இருக்கிறார். மேலும், அவர் உள்ளூர் போட்டிகளிலும் ஆடவில்லை. அவர் தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து அதில் எது சிறந்ததோ அதைத்தான் செய்தார். ஆனால், இரண்டு நல்ல பந்துகள் வந்தவுடன் அவர் தடுமாறத் தொடங்கி விட்டார். நான் சில வாரங்கள் முன்பே கூறியபடி ரோஹித் மற்றும் விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. அதனால், அவர்கள் நிச்சயம் துலீப் டிராபி தொடரில் விளையாடி இருக்க வேண்டும். அப்படி விளையாடி இருந்தால் அவர்களுக்கு போட்டிக்கான சிறிதளவு பயிற்சி கிடைத்திருக்கும். தற்போது அவர்கள் திடீரென முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அழைக்கப்பட்டவுடன் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்" என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த விமர்சனத்துக்கு பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய போது ரோஹித் சர்மா 5 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 17 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.