கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களை பயன்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தி இருக்கிறார். இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி நிச்சயமாக மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என அவர் கூறி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அனைவரையுமே பயன்படுத்த வேண்டும் என அவர் கூறி இருக்கிறார். சென்னை தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம்பெற்று இருந்தனர்.

மூன்றாவது ஸ்பின்னர் ஆன குல்தீப் யாதவுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், அடுத்து நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் மூன்று ஸ்பின்னர்களை இந்திய அணி ஆட வைக்க வேண்டும் எனவும், இந்திய பிட்ச்கள் மூன்றாவது நாள் முதல் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனவும் அவர் கூறி உள்ளார்.
இது குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் பேசுகையில், "குல்தீப் யாதவை எளிதாக நாம் அணியில் இருந்து நீக்க முடியாது என நான் நினைக்கிறேன். சுழற் பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமான பிட்ச்சாக இல்லை என்றாலும் கூட சென்னையில் நடந்த போட்டியில் குல்தீப் யாதவை நாம் ஆடவைத்து இருந்தால், அதன் மூலம் நமக்கு பலன் கிடைத்திருக்கும். ஒன்றரை நாள் மட்டுமே பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்." என்றார்.
மேலும், "குல்தீப் யாதவ் போன்ற ஒரு பவுலர் அணியில் இருக்கிறார் என்றால், அவரை நாம் வெளியே அமர வைக்க முடியாது. கான்பூர் டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களை ஆட வைக்க வேண்டும். அங்கு பச்சை நிற புல் தரையாக இருந்தாலும், சூரியன் அதிகமாக இருந்தாலும், அந்த புல் தரை என்பது முதல் சில மணி நேரங்களுக்கு மட்டுமே இருக்கும். அதற்கு சிராஜ் மற்றும் பும்ரா மட்டுமே போதும். மூன்று நிரூபிக்கப்பட்ட சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது அவர்கள் மூவரையும் நாம் ஆட வைக்க வேண்டும்." என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.