குவாலியர்: சஞ்சு சாம்சனுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், அவருக்கு தொடர்ந்து ஏழு போட்டிகளில் துவக்க வீரராக ஆடும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய இரண்டு துவக்க வீரர்கள் இடம் பெறவில்லை.
அவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பதால், அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் ஓய்வு எடுத்து வருகிறார்கள். அதனால், வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் துவக்க வீரர்களாக செயல்படுவார்கள் என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அபிஷேக் ஷர்மா எப்போதுமே துவக்க வீரராக ஆடி வருபவர். சஞ்சு சாம்சன் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என அனைத்து பேட்டிங் வரிசைகளிலும் பேட்டிங் செய்துள்ளார்.

இதுவரை அவருக்கு இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் சரியான வாய்ப்புகள் இதுவரை கிடைக்காமல் இருந்து வந்தது. ஒவ்வொரு போட்டியிலும் அவரது பேட்டிங் ஆர்டர் மாறிக் கொண்டே இருக்கும். அதனாலேயே அவர் சரியாக ரன் குவிக்கவில்லை என அவரது ஆதரவு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால், தற்போது சஞ்சு சாம்சனுக்கு ஏழு போட்டிகளில் தொடர்ந்து துவக்க வீரராக ஆடும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த மூன்று போட்டிகளில் அவர் ஒரு அரை சதம் அடித்தாலும் கூட அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் அவரே துவக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அது முடிந்த பின் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரின் போது சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம், தொடர்ந்து ஏழு போட்டிகளில் அவர் துவக்க வீரராக ஆட முடியும். அதன் முடிவில், அவர் ஓரிரு சதம் மற்றும் அரை சதம் அடித்தால் பின்னர் இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பையும் பெற முடியும்.