ஆன்டிகுவா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என நேற்று முதல் செய்திகள் வெளியாகி வந்தன. வலைப் பயிற்சியின் போது சஞ்சு சாம்சன் அருகே சென்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட நேரம் விவாதித்ததாகவும், அவரை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களம் இறக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதை அடுத்து சஞ்சு சாம்சன் ரசிகர்கள் இணையத்தில் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி நான்கு போட்டிகளில் விளையாடியது. அதில் ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேனாக களம் இறங்கி வந்த சிவம் துபே சரியாக ஆடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. அவரால் பந்துகளை சரியாக கணித்து அடிக்க முடியவில்லை. அவர் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், வங்கதேச போட்டிக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மற்றும் நாக் அவுட் போட்டிகள் இருப்பதால் அதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலேயே இந்திய அணி சிவம் துபேவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை ஆட வைக்கக் கூடும் என யூகங்கள் கிளம்பின.
அதற்கு ஏற்ப பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா சஞ்சு சாம்சனுக்கு பயிற்சியின் போது ஆலோசனைகள் வழங்கியதாகவும், அவர் எப்படி ஆடுகிறார் என அருகில் நின்று பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் நிகழ்வின் போது கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்தார். அதன் மூலம் சிவம் துபே அணியில் ஆடுவது உறுதியானது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதை சஞ்சு சாம்சன் ரசிகர்கள், இனி அவருக்கு வாய்ப்பு அளிக்கவே வேண்டாம் என கூறி வருகின்றனர். இதுவரை நடந்த எளிதான அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது அவருக்கு வாய்ப்பு அளிக்காமல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மற்றும் அரை இறுதி போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில் வாய்ப்பு அளித்து விட்டு, அதில் அவர் சரியாக ஆடவில்லை என்றால் அதை காட்டியே அடுத்து வாய்ப்பு அளிக்காமல் இருப்பார்கள் என சுட்டிக் காட்டி உள்ளனர்.