தவித்து வருகிறார்
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இயங்கி வரும் நிலையில் அதற்கு பொருத்தமான வீரரான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் உத்தேச அணியில் இடம் பிடித்தார். ஆனால், அணியில் வேறு ஒரு வீரருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வாய்ப்பின்றி தவித்து வருகிறார்.
2015 அறிமுகம்
கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகம் ஆனவர் தான் சஞ்சு சாம்சன். அவர் ஆடிய முதலும், கடைசியுமான சர்வதேச டி20 போட்டி தான். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் அவர் இதுவரை வாய்ப்பு பெறவில்லை.
வாய்ப்பு இல்லை
அவரது டி20 அறிமுகப் போட்டிக்குப் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுமார் நான்கு ஆண்டுகளாக வாய்ப்பின்றி தவித்த சஞ்சு சாம்சன், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார்.
ஐபிஎல் தொடர்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய சஞ்சு சாம்சன் மீது அந்த அணியின் ஆலோசகராக இருந்தவரும், தற்போதைய விளம்பர தூதருமான ஜாம்பவான் ஷேன் வார்னே அதீத நம்பிக்கை வைத்திருந்தார்.
அதிரடி இரட்டை சதம்
அதை கடந்த இரு ஐபிஎல் தொடர்களில் நிரூபித்த சஞ்சு சாம்சன், அடுத்ததாக சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ போட்டி ஒன்றில் 48 பந்துகளில் 7 சிக்ஸ் உட்பட 91 ரன்கள் எடுத்தார். அடுத்து விஜய் ஹசாரே தொடரில் 10 சிக்ஸ் உட்பட இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
வங்கதேச தொடரில் வாய்ப்பு
அந்த இரட்டை சதத்தால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார் சஞ்சு சாம்சன். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு பெற்றாலும் அவர் விக்கெட் கீப்பர் என்ற அடையாளத்தால் இந்த முறை வாய்ப்பு பெறவில்லை.
பேட்ஸ்மேன் மட்டுமே
இந்திய அணியின் தேர்வுக் குழு கூறுகையில், டி20 அணியில் சஞ்சு சாம்சனை முழுமையான பேட்ஸ்மேனாக கருதியே தேர்வு செய்துள்ளோம் எனக் கூறியது. அதற்கு முக்கிய காரணம், ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை
ரிஷப் பண்ட், தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என பார்க்கப்படுகிறார். அவர் இன்னும் வளர்ந்து வரும் வீரர் தான் என்றாலும், அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங் சுமாராக இருந்தாலும், தேர்வுக் குழு ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பதில் பிடிவாதமாக இருக்கிறது.
சஞ்சு சாம்சன் நிலை
பண்ட் முதல் டி20 போட்டியில் 26 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரர் என கூறப்பட்டாலும் தன் பேட்டிங் முறையை மாற்றி நிதான ஆட்டம் ஆடினார் பண்ட். ஆனால், அது அணிக்கு பெரிய அளவில் உதவவில்லை. அவரது டிஆர்எஸ் முடிவுகளும் விமர்சனத்தை சந்தித்தது. அதே சமயம், சஞ்சு சாம்சனுக்கு முதல் டி20யில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் ஒரு மாற்று வீரராகவே அணியில் இருக்கிறார்.
வாய்ப்பு கிடைக்குமா?
பண்ட் சரியாக ஆடாவிட்டாலும், அடுத்த இரு டி20 போட்டிகளில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு எனத் தெரிகிறது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. வேறு பேட்ஸ்மேன் யாரையேனும் நீக்கினால் மட்டுமே சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.