ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நிச்சயம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டஸ்காட்டே தெரிவித்துள்ளார். அதேபோல் டி20 தொடரை வென்றிருப்பதால், சில புதிய முகங்களை நாளைய ஆட்டத்தில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை ஐதராபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. ஏனென்றால் முதல் டி20 போட்டியில் 19 பந்துகளில் 29 ரன்களும், 2வது டி20 போட்டியில் 7 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இல்லாத போது பெரிய இன்னிங்ஸை விளையாடி இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 போட்டிகளில் சேர்த்து 39 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பதால், இனியும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்காட்டே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அடுத்த 18 மாதங்களில் ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட ஏராளமான ஐசிசி தொடர்கள் நடக்கவுள்ளன. இதனால் இரு தரப்பு தொடர்களில் இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அவர்களை தயார் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
சஞ்சு சாம்சனை பொறுத்தவரை 2 போட்டிகளிலும் அவருக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. அவர் நினைத்திருந்தால் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்திருக்க முடியும். ஆனால் ஒவ்வொரு ஓவர்களிலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். அதேபோல் வீரர்களுக்கான மெசேஜ் அனுப்பப்பட்டு கொண்டே இருக்கிறது. அவர்களின் ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளோம்.
இந்திய வீரர்கள் தங்களின் ஆட்டத்தை தீவிரப்படுத்தி கொண்டே செல்ல வேண்டும். ஏனென்றால் அழுத்தம் நிறைந்த சூழல்களுக்கு தயாராகும் பொறுப்பு உள்ளது. அதனால் சஞ்சு சாம்சனுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும். டி20 தொடரை வெல்ல வேண்டும் என்பது முதற்கட்ட திட்டமாக இருந்தது. இதனால் கடைசி போட்டியில் சில புதிய முகங்களை இந்திய அணியில் பார்க்க முடியும்.
இந்திய அணியில் அனைத்து ரோல்களிலும் விளையாடக் கூடிய வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள். இந்த டி20 தொடரில் ரியான் பராக்கிற்கு அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் ரெட்டியை நம்பர் 4ல் முயற்சித்தோம். ஏனென்றால் நம்பர் 4 அல்லது நம்பர் 5ல் விளையாடி ஆட்டத்தை முடிக்க கூடிய ஃபினிஷரை உருவாக்க வேண்டிய தேவை உள்ளத என்று தெரிவித்துள்ளார்.