டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இனியும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார். தற்போது ஐசிசி டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பேக் அப் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

இருப்பினும் வங்கதேச டி20 தொடரில் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டதோடு, தொடக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். கொஞ்சம் கூட அவசரம் இல்லாமல் சஞ்சு சாம்சன் ஆடிய ஆட்டம் பலரையும் ரசிக்க வைத்தது.
ஆனாலும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டுமென்றால், சஞ்சு சாம்சனிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் ஒன்று தேவையாக இருந்தது. இதனால் 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. பின்னர் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
முதல் ஓவரை மெஹதி ஹசன் மிராஸ் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே பவுன்ஸ் குறைவாக இருந்தது தெரிய வர, சஞ்சு சாம்சன் உஷாராக பேட்டை தாழ்வாக வைத்தே விளையாடினார். முதல் ஓவரிலேயே எந்தவித ரிஸ்கும் எடுக்காமல் கிளாசிக்காக 2 பவுண்டரிகளை ஆஃப் சைடில் அடிக்க, டெல்லி மைதானமே அதிர தொடங்கியது.
இதன்பின் 2வது ஓவரை வீசுவதற்கு டஸ்கின் அஹ்மத் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் நிதானம் காட்டிய நிலையில், முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் சஞ்சு சாம்சன் ரிஸ்க் எடுத்து பவுண்டரி அடிக்க முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையறிந்த டஸ்கின் அஹ்மத், அந்த பந்தில் கொஞ்சம் கூட வேகம் கொடுக்காமல் 122 கிமீ வேகத்தில் பந்தை வீசினார்.
இதனை எதிர்பார்க்காத சஞ்சு சாம்சன் பேட்டை விரைவாக வீசி ஷாட் ஆட, அது நேராக மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த கேப்டன் ஷான்டோ கைகளில் சென்று விழுந்தது. இதனால் 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சஞ்சு சாம்சன் இப்போதும் கன்சிஸ்டன்சியுடன் விளையாட கற்றுக் கொள்ளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரிடம் இருக்கும் கன்சிஸ்டன்சி சஞ்சு சாம்சனிடம் கொஞ்சம் கூட இல்லை என்று ரசிகர்கள் கடுமையாக விவாதித்து வருகின்றனர். இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் பார்க்கப்படுகிறது.