வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும். சஞ்சு சாம்சன் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 29 ரன்களும், இரண்டாவது டி20 போட்டியில் 10 ரன்கள் அடித்திருந்தார். அதற்கு முன்பாக இலங்கைக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் தொடர்ந்து சஞ்சு சாம்சன், டக் அவுட் ஆனார்.

இதனால் சஞ்சு சாம்சன் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதில்லை என்று பலரும் குற்றச்சாட்டி வந்தனர். கேரள ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு தேவையில்லாமல் ஆதரவளிப்பதாகவும், அதற்கு தகுதியான நபராக சஞ்சு சாம்சன் இல்லை என்றும் பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு பேட்டால் பதிலடி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து வங்கதேச பவுலிங்கை சுக்குநூறாக உடைத்த சஞ்சு சாம்சன் முதலில் 22 பந்துகளில் அரை சதமும், பின் 40 பந்துகளில் சதமும் அடித்து சாதனை படைத்தார். இதை அடுத்து 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 111 ரன்கள் விளாசினார்.
இதில் எட்டு இமாலய சிக்சர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். 236 ஸ்ட்ரைக் ரேட் என்ற அளவில் இருந்தது. சதம் அடித்த பிறகு சஞ்சு சாம்சன் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். முதலில் நாக்கை அசைத்து கேலி செய்த அவர், பின்னர் ரசிகர்களை பார்த்து தன்னுடைய ஆர்ம்ஸ்-ஐ காட்டி என்னுடைய பலத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று உணர்த்தினார்.
இந்த ஒரே இன்னிங்ஸ் மூலம் சஞ்சு சாம்சன், தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டதாகவும் அவருக்கு ஒரு நாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து இடம் வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சதத்தை கேரள ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். சஞ்சு சாம்சன் திறமையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.