ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு மிகப்பெரிய கூட்டணி அமைத்து பல்வேறு சாதனைகளை முறியடித்து உள்ளனர். அவர்கள் ஆட்டத்தால் வங்கதேச பவுலர்கள் டி20 கிரிக்கெட்டின் படுமோசமான சாதனையை செய்தனர்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. துவக்க வீரர் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டம் இழந்த பின், சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்தனர்.

இருவரும் போட்டி போட்டு அதிரடியாக ஆடினார்கள். சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் கடந்தார். அவர் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்களின் அதிரடிக்கு பின் ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்களும் சேர்த்தனர்.
இதை அடுத்து ஐந்து வங்கதேச பவுலர்கள் 40 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து கிரிக்கெட்டின் மோசமான டி20 பந்துவீச்சு சாதனையை பதிவு செய்தனர். இதுவரை டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் 40 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்த நிகழ்வு மூன்று முறை நடந்துள்ளது. தற்போது நான்காவது முறையாக வங்கதேசம் அந்த மோசமான சாதனையை நிகழ்த்தி உள்ளது.
சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்து இருந்தனர். அதன் மூலம் பல்வேறு சாதனைகளை உடைத்தனர். சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணிகளில் மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது இந்த 173 ரன் கூட்டணி. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 2 வது விக்கெட்டுக்கு அமைக்கப்பட்ட கூட்டணிகளில் இது நான்காவது இடத்தை பிடித்தது.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 150 ரன்களுக்கும் அதிகமாக அமைக்கப்பட்ட கூட்டணிகளில் அதிக ரன் ரேட் உடைய கூட்டணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.