அனந்தபூர்: இனி இந்திய அணியில் சஞ்சு சாம்சனால் இடம்பெற முடியாது என அவரது ரசிகர்களே சமூக வலைதளங்களில் புலம்பத் துவங்கி இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவர் சமீபத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மோசமாக சொதப்பி இருப்பது தான். சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவில்லை என அவரது ரசிகர்களால் எப்போதும் ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வந்தது.
அவர் 2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்ற போதும் ஒரு போட்டியில் கூட அவர் களமிறங்கவில்லை. எனினும், இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார். ஆனால், இலங்கை அணிக்கு எதிராக ஆடிய இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அப்போதே அவருக்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு அளிக்கக்கூடாது என பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். இந்த நிலையில், அவர் துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரின் இரண்டாம் சுற்றில் சேர்க்கப்பட்டார்.
இந்தியா டி அணியில் இடம் பெற்ற அவர் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும் அவர் அதை பயன்படுத்தி கொள்வதில்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என அவரது ரசிகர்களே சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
மற்றொரு இந்திய வீரரும் மிகப் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்து இருக்கிறார். அந்த வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் துலீப் ட்ராபி தொடரின் முதல் போட்டியில் அரை சதம் அடித்து இருந்தாலும் அவர் தனது விக்கெட்டை மோசமான ஷாட் ஆடி இழக்கிறார். அதிரடியாக ஷாட் ஆட ஆசைப்பட்டு அவர் தனது விக்கெட்டை இழப்பதுதான் அவரது மிகப் பெரிய பலவீனமாக உள்ளது. இரண்டாவது போட்டியில் அவர் டக் அவுட் ஆனார். அதனால் அவருக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்காது என ஒரு கருத்து நிலவுகிறது.
முன்னதாக அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் அளிக்கப்படவில்லை. அடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஆட உள்ள நிலையில் அந்த தொடர்களிலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படாது என தெரிகிறது. அதே போல, சஞ்சு சாம்சன் இனி இந்திய டி20 அணியில் இடம் பெறுவாரா? என்பதும் கேள்விக் குறியாகி இருக்கிறது. இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணியில் அவர் இடம் பெறுவாரா? என பார்க்கலாம்.