மும்பை : இந்திய வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய அணிக்கான பயிற்சி முகாம் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், பும்ரா, அஸ்வின் ஜடேஜா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பங்கு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் துலீப் குப்பை தொடரில் விளையாடி வந்த கில், கே எல் ராகுல், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப், குல்திப் யாதவ் ஆகியோர் துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த வீரர்கள் அனைவரும் இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் பயிற்சி முகாமில் பங்கு பெற சென்னை வரப் போகிறார்கள் என்றும் பிசிசிஐ விளக்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சர்பராஸ்கான் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் இந்திய அணி முகாமுக்கு சர்பராஸ்கான் வர வேண்டாம் என்று தேர்வு குழு அறிவித்திருக்கிறது.
அதற்கு பதிலாக துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் விளையாடுமாறு சர்பராஸ்கானுக்கு அறிவுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் என்றும் அதற்கு பதிலாக கே எல் ராகுலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் சர்பராஸ் கான் தேவையில்லாமல் பயிற்சி முகாமில் பங்கு பெறுவதற்கு பதில் துலீப் கோப்பை தொடரில் விளையாடினால் அது அவருடைய பேட்டிங்கிற்கு நல்லதாக இருக்கும் என்ற முடிவில் தேர்வு குழு இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இந்த நிலையில் துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று வரும் 16ஆம் தேதி முடிவடைகிறது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி தான் தொடங்குகிறது என்பதால் அதற்கு முன்பு சர்பராஸ்கான் அணிக்கு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிளேயிங் லெவன் வாய்ப்பு கிடைப்பதுதான் சந்தேகம் என தெரிகிறது.