மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று மூன்று போட்டிகளில் மட்டும் ஆடி இருக்கும் சர்பராஸ் கானுக்கு மூத்த வீரர்களால் அணியில் இடம் கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. சுமார் ஏழு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனக்கு காத்திருந்த இளம் வீரர் சர்பராஸ் கான் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்றார்.
அந்த தொடரில் பல வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டது. அந்த தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் அவர் விளையாடினார். அதில் மூன்று அரை சதம் அடித்து இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 62 மற்றும் 68 ரன்கள் குவித்தார். இரண்டாவது போட்டியில் 14 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்து இருந்தார்.

எனினும், தனது மூன்றாவது போட்டியில் அவர் 56 ரன்கள் அடித்து மீண்டும் தன்னை நிரூபித்து இருந்தார். இந்த நிலையில் அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் சர்பராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட் என பேட்டிங் வரிசைகச்சிதமாக உள்ளது. இதில் ஒரு வீரரை நீக்கி விட்டு சர்பராஸ் கானை ஆட வைப்பது கடினமே.
சர்பராஸ் கான் மாற்று வீரராக மட்டுமே டெஸ்ட் அணியில் இடம் பெற முடியும் என்ற நிலை உள்ளது. தனது 19வது வயதில் இருந்து இந்திய அணி வாய்ப்புக்காக காத்திருந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்துக்கு பின்பே மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெற்று இருந்தார். தற்போது மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலை இது குறித்து அவர் பேசுகையில், "வங்கதேச தொடரில் எனக்கு இடம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் எனது பணியை செய்து அந்த தொடருக்காக தயாராக இருப்பேன். துலீப் டிராபி மற்றும் புச்சி பாபு தொடரில் விளையாட உள்ளேன். இந்த போட்டிகள் மிகவும் முக்கியமானவை. நான் எனது வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பேன். இதைத்தான் நான் நீண்ட காலமாக செய்து கொண்டு இருக்கிறேன். அதை மாற்ற வேண்டிய அவசியம் எதுவும் எப்போதும் இல்லை." இவ்வாறு சர்பராஸ் கான் கூறி இருக்கிறார்.