லக்னோ: இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய இளம் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டை சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். இராணி கோப்பை தொடரில் இரட்டை சதம் விளாசிய முதல் மும்பை வீரர் என்ற சாதனையையும் சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார்.
நடப்பாண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்ட இளம் நட்சத்திர வீரரான சர்ஃபராஸ் கான் 3 அரைசதங்கள் உட்பட 200 ரன்களை விளாசினார். இதனால் எதிர்காலத்தில் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரராக இருப்பார் என்று கருதப்பட்டது. இதன்பின் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடாததால், உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட புச்சி பாபு தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட சர்ஃபராஸ் கான் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்கவில்லை. இதன்பின் நடந்த துலீப் டிராபி தொடரிலும் இந்தியா பி அணிக்காக ஆடிய சர்ஃபராஸ் கான் 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 71 ரன்களை மட்டுமே சேர்த்தார். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்து வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் இந்திய அணி பயிற்சியாளர்களுடன் தொடர்ந்து நேரம் செலவிட்டு வந்தார். சென்னை டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின், உடனடியாக ஃபிட்னஸ் பயிற்சியாளர்களுடன் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். அதேபோல் பேட்டிங் பயிற்சியிலும் கம்பீரை ஈர்த்தார்.
இதன்பின் கான்பூர் டெஸ்ட் போட்டி கடைசி நாள் ஆட்டத்திற்கு முன்பாகவே இந்திய அணியில் இருந்து சர்ஃபராஸ் கான் விடுவிக்கப்பட்டு, இராணி கோப்பையில் விளையாட அறிவுறுத்தப்பட்டார். எந்தவித தயக்கமும் இல்லாமல் களமிறங்கிய சர்ஃபராஸ் கான், இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.
அனுபவ வீரரான ரஹானேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சர்ஃபராஸ் கான், மும்பை அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இதனிடையே ரஹானே 97 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சர்ஃபராஸ் கான் சதம் அடிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதற்கேற்ப 90 ரன்களில் இருந்த போது, சர்ஃபராஸ் கான் கொடுத்த கேட்சை பிரசித் கிருஷ்ணா தவறவிட்டார்.
இறுதியாக 149 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட சர்ஃபராஸ் கான் சதத்தை பூர்த்தி செய்தார். உணவு இடைவேளையின் போது 103 ரன்களுடன் ஓய்வறை சென்ற போது, மும்பை அணி வீரர்கள் எழுந்து நின்று கைகளை தட்டி வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர் தனுஷ் கோட்டியான் - சர்ஃபராஸ் கான் இணைந்து அதிரடி ஆட்டத்திற்கு கியரை மாற்றினார். சர்ஃபராஸ் கான் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார்.
இதனால் விரைவாக 150 ரன்களை எட்டிய சர்ஃபராஸ் கான், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வந்தார். ஒரு கட்டத்தில் சர்ஃபராஸ் கானை எந்த பவுலராலும் தடுக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கான், 253 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டி சாதனை படைத்தார். இராணி கோப்பையில் இரட்டை சதம் விளாசிய முதல் மும்பை வீரர் என்ற புதிய வரலாற்றை சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார். அதேபோல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கானின் பேட்டிங் சராசரி 69.6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அடுத்து வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.