தோனி விடுப்பு
தோனி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகி நீண்ட விடுப்பில் இருக்கிறார். உலகக்கோப்பை தொடருக்கு பின் அவர் எந்த சர்வதேச போட்டிகளிலோ, உள்ளூர் போட்டிகளிலோ பங்கேற்கவில்லை.
இந்திய அணி தேர்வு
இந்த நிலையில், அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து நேற்று நடந்த வங்கதேச கிரிக்கெட் தொடருக்கான அணித் தேர்வில் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கங்குலி - தேர்வுக் குழு சந்திப்பு
பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவராக பதவி ஏற்று இருக்கும் கங்குலி, தோனி விவகாரம் குறித்து தேர்வுக் குழுவிடம் கேட்டு அறிய உள்ளதாகவும், தோனியிடம் பேசுவேன் என்றும் கூறி இருந்தார்.
தோனி நிலை என்ன?
இந்த நிலையில், தேர்வுக் குழு கூட்டத்துக்குப் பின் கங்குலி பத்திரிக்கையாளர்களிடம் பேசவில்லை. தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தான் அணித் தேர்வு பற்றியும், தோனி குறித்தும் பேசினார். அவரது பேச்சில் தோனிக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்பதை நாசூக்காக, யாருக்கும் வலிக்காத வகையில் கூறினார்.
ரிஷப் பண்ட்-டுக்கு வாய்ப்பு
அவர் கூறுகையில், உலகக்கோப்பை தொடருக்குப் பின் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளித்து ஆதரித்து வருகிறோம். அவர் சரியாக ஆடவில்லை என்றாலும் அவரை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் நல்ல வீரரை உருவாக்க முடியும் என நம்புகிறோம் என்றார்.
தெளிவான முடிவு
உலகக்கோப்பைக்கு பின் தோனியை தாண்டி நாங்கள் நகர்ந்து விட்டோம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறோம். பண்ட் அணியில் இருக்கிறார். அடுத்து சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் எங்கள் எண்ண ஓட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்றார் பிரசாத்.
ஆஃப் செய்த தலைவர்
அப்போது தான் ஒருவர் இளம் வீரர்களை அடுத்து தோனிக்கு மீண்டும் வாய்ப்பு அழிப்பது பற்றி கேள்வி கேட்டார். அதற்கு, "ஒரே விஷயத்தை எங்களால் திரும்ப கூற முடியாது"எனக் கூறி அதிர்ச்சி அளித்தார் பிரசாத். தோனிக்கு இனி வாய்ப்பு இல்லை என்பதை தான் இப்படி அவர் கூறி இருக்கிறார் என கருதப்படுகிறது.
பயிற்சியில் தோனி
இதற்கிடையே தோனி ஜார்கண்ட் மாநில அணியுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும், உள்ளூர் போட்டிகளில் ஆடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் ஒரு செய்தி பரவி வந்தது. அது பற்றி தேர்வுக் குழு தலைவரிடம் கேட்கப்பட்டது.
அது அவர் முடிவு
அதற்கு, "உள்ளூர் போட்டிகளில் ஆடுவது, மீண்டும் பார்ம் பெறுவது அல்லது ஓய்வு பெறுவது, அது எல்லாமே அவரது முடிவு. நாங்கள் ஏற்கனவே எதிர்காலத்துக்கான திட்டங்களை செய்து விட்டோம்" என்று கூறி தோனிக்கு இனி வாய்ப்பே கிடைக்காது என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லாமல் சொன்னார் பிரசாத்.
அதிர்ச்சி அளிக்கும் முடிவு
தோனிக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்பது பலருக்கும், குறிப்பாக தோனி ரசிகர்களுக்கு, பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கங்குலி இது பற்றி என்ன சொல்லப் போகிறார்?